வெளியானது தேர்தல் குறித்த மெகா அறிவிப்பு.. நாட்டை தீர்மானிக்க போகும் முதல்முறை வாக்காளர்கள்..விவரம்
டெல்லி: 18-வது லோக்சபா பொதுத்தேர்தல் தேதியை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்த முறை நாட்டில் 1.82 கோடி பேர் முதல் முறையாக ஓட்டு போட உள்ளார்கள் என்றும், 96.80 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளதாகவும், 85 வயதைக் கடந்த 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், தேர்தல் நடத்திய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டியது அவசியம் ஆகும்.

அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் 18-வது லோக்சபா பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே தொடங்கியது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தது.
இது ஒருபுறம் எனில், அரசியல் கட்சியினர் ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என மும்முரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவியது. இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிப்பு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
அதாவது இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு,18-வது லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது. இதனிடையே தேர்தல் ஆணைய அலுவலகமான டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் செய்தியாளர் சந்திப்பு பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.

புதிய தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்ற ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதியை அறிவித்தார்.. இதில் நாட்டின் லோக்சபா தேர்தலுடன், அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உளளது . தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றே தமிழ்நாட்டிற்கு லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற போகிறது. ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் கேரளாவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் மே 20 ம் தேதியும், ஆறாம் கட்ட தேர்தல் மே 25ம் தேதியும், ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18-வது லோக்சபா பொதுத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்த முறை நாட்டில் 1.82 கோடி பேர் முதல் முறையாக ஓட்டு போட உள்ளார்கள் என்றும், 96.80 கோடி பேர் வாக்காளர்கள் உள்ளதாகவும், 85 வயதைக் கடந்த 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் கூறினார். இவர்கள் வாக்களிப்பதற்காக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும், 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. வாக்களிக்க உள்ள வாக்காளர்களில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி. மொத்தம் உள்ள 96.80 கோடி வாக்காளர்களில் 88.4 லட்சம் வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர் என்று கூறினார். நாட்டின் 12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் தேர்தல் ஆணையர் கூறினார். 19.47 கோடி வாக்காளர்களின் வயது 20-29 ஆக உள்ளது என்றும் தேர்தல் ஆணையர் கூறினார்
கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் 10-ந்தேதி வெளியான நிலையில், ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மே 23-ந்தேதி முடிவுகள் வெளியாகியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications