ஒரே வருடத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை காலி.. அதிர வைக்கும் புள்ளி விவரம்
டெல்லி: இந்தியாவில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் வேலையை இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நரேந்திர மோடி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் 3ஆயிரம் பேரும் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேரும் வேலை இழந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல்காந்தி மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் கடந்த 2018 ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் அதாவது நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் வேலை இழந்துவருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் மட்டும் ஏழரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று ராகுல் கூறினார்.

ராகுல் பிரச்சார கூட்டத்தில் பேசியது ஒரு புறம் என்றால் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையிலும் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேலை இழப்பு பிரச்சனையில் அதிகமாக மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த அறிக்கையின்படி கடந்த 2017 -ம் ஆண்டு வேலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 407.9 மில்லியன் அதுவே கடந்த 2018 -ம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கெடுப்பு படி வேலையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 397 மில்லியனாக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2017 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒரு கோடி பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.

இந்த வேலையிழப்பு விகிதம் கிராமம் நகரம் என்று இரண்டிலும் இருந்தாலும் நகரத்தை விட கிராமங்களில் வேலையிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் கிராமப்புறங்களில் 9.1 மில்லியன் மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமங்களிலேயே வசித்து வருகின்றனர். இதில் கிட்டத்தட்ட 84% மக்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கிறது அந்த அமைப்பின் அறிக்கை.
பணமதிப்பிழப்பு நடவடைக்குப் பின்னர் இந்த வேலை இழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த வேலைகளை இழந்தவர்களில் பெண்கள் 8.8 மில்லியன் பேர். 2.2 ஆண்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். 3.7 மில்லியன் மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்த வேலையிழப்பு விகிதம் கடந்த 15 மாதங்களை ஒப்பிடும்போது இது அதிகம் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது












Click it and Unblock the Notifications