2023-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள் இத்தனையா? நாடாளுமன்றத்தில் ஷாக் தகவல்!
டெல்லி: 2023-ம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாவது:

2023-ம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வட இந்தியாவிலும் நேபாளத்திலும் அவ்வப்போது மிதமான நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்படுவது வழக்கம்.
கடந்த 3 ஆண்டுகளிலும் நடப்பாண்டிலும் புதுதில்லியில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் பதிவு செய்துள்ளபடி இந்த பகுதிகளில் ஏற்பட்ட பூகம்ப நிகழ்வுகளின் விவரங்கள்:
2020-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 42. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை.
2021-ம் ஆண்டில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரை பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 18, 5.0 முதல் 5.9 வரை 1 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் நில நடுக்கம் பதிவாகவில்லை.
2022-ம் ஆண்டில் 3.0 முதல் 3.9 வரையிலான ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வுகள் 41. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 20, 5.0 முதல் 5.9 வரை 3 என பதிவாயின. 6.0 முதல் 6.9 வரையில் 1 நில நடுக்கம் பதிவானது.
2023-ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரையில் ரிக்டர் அளவு கோலில் 3.0 முதல் 3.9 வரையிலான நில அதிர்வுகள் 97. 4.0 முதல் 4.9 வரையிலான நிலநடுக்கங்கள் 21-ம், 5.0 முதல் 5.9 வரை 4 நிலநடுக்கங்களும், 6.0 முதல் 6.9 வரையில் 2 நில நடுக்கங்களும் பதிவாயின.
இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இந்தியாவின் நில அதிர்வு மண்டல வரைபடத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட நிலநடுக்க மண்டலங்களில் நிலநடுக்கத்தை எதிர்க்கும் கட்டடங்களை கட்டுவதற்கான அத்தியாவசிய பொறியியல் தரங்கள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அது வழங்குகிறது. நிலநடுக்கம் தொடர்பான தயார்நிலை மற்றும் பதில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நிலநடுக்கம் தொடர்பான ஒத்திகைகள், விழிப்புணர்வுத் நிகழ்வுகள் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) பொறுப்பாக உள்ளது. இவ்வாறு மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு லோக்சபாவில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications