லடாக் மோதல்: மால்டோவில் இந்தியா-சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன
டெல்லி: லடாக் எல்லை மோதல் காரணமாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற 13 ஆவது கட்ட பேச்சுவார்த்தை மாலை 7 மணியளவில் முடிந்தது.
லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்து வந்தது. இதனால் வடபகுதியில் காரகோரம் அருகே தாலட் பெக் ஓல்டி இந்திய சோதனை சாவடி, தேப்சாங் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் வழக்கமாக மேற்கொள்ளும் ரோந்து பணிகளை இந்திய ராணுவத்தினர் செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டது.
இந்த பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து எல்லையில் உள்ள பாங்கோங் சோ ஏரி கரை பகுதி மற்றும் கோக்ரா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்ப பெற்றன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 12 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.கடைசியாக நடந்த 12 ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் போது கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் ராணுவத்தை விலக்கிக் கொண்டது. இரு நாடுகளுக்கு இடையேயான 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று மால்டோ எல்லையில் நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 8 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கு இடையே சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது. இதில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் லே ஐ மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 14ஆவது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி. கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அது போல் சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பகுதியின் கமாண்டர் மேஜர் ஜெனரல் லியூ லின் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்திய- சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. உத்தரகாண்ட் பகுதியில் உள்ள பராஹோட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் 100- க்கும் மேற்பட்ட சீன படையினர் ஊடுருவினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications