புதிதாக பணியில் சேருவோருக்கு ஒரு மாத சம்பளம்.. இபிஎப்ஓ குறித்து நிர்மலா சீதாராமன் இன்ப அதிர்ச்சி
டெல்லி: இபிஎப்ஓவில் பதிவு செய்யப்படும் புதிய பணியாளர்களுக்கு 15000 வரை ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 23 அன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் 2024 ஐ தாக்கல் செய்தார், இந்தியாவுக்கான ஒரு பெரிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிப்பதாக அறிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ளது. இதையடுத்து புதிய அரசு இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் மும்முரம் காட்டியது. 2024-25ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். அதன்படியே 2024, 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் இந்தியாவுக்கான ஒரு பெரிய வேலை வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிதியாண்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல் அடுத்த ஆண்டில் வேலைவாய்ப்பு தொடர்பான மூன்று திட்டங்களை அரசு தொடங்கும் என்றும் கூறினார்.
அதில் முக்கிய நடவடிக்கையாக, புதிதாக வேலையில் சேரும் 30 லட்சம் இளைஞர்களுக்கு 1 மாத பிஎஃப் பங்களிப்பை வழங்குவதன் மூலம் அரசாங்கம் ஊக்கத்தொகையை வழங்கும் என்று அறிவித்துள்ளார். இதன்படி இபிஎப்ஓவில் பதிவு செய்யப்படும் அனைத்து முறையான துறைகளிலும் முதல் முறையாக பணிபுரிபவர்கள் ஒரு மாத ஊதியத்தைப் பெறுவார்கள்.
ஒரு மாத சம்பளம், 15,000 ரூபாய் வரை நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூன்று தவணைகளில் வழங்கப்படும். ஒரு மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இந்த தகுதி உடையவர்கள் ஆவார். மேலும் இதன் மூலம் 2.1 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
இதேபோல் இனி ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் இபிஎப்ஓ பங்களிப்புக்காக அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முதலாளிகளுக்கு மாதம் ரூ 3,000 வரை திருப்பிச் செலுத்தும் என்றும், இந்த முயற்சி 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். வேலைக்கு போகும் பெண்களுக்கு தங்கும் விடுதிகளை அமைக்கப்படும் என்றும் கூறினார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான ஒரு பெரிய ஊக்கம் தரும் விஷயங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள், 2024 நிதியாண்டில் 6% ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த நிதியாண்டில் இது 3.2% ஆக இருந்தது. இந்த மாதம் வெளியிடப்பட்ட தொழில்துறை அளவிலான உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த ரிசர்வ் வங்கியின் தரவுகளில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.
சிட்டி பேங்க் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 8 மில்லியனில் இருந்து 9 மில்லியன் வேலைகளை மட்டுமே உருவாக்கும் என்று கூறியிருந்தது. அதேநேரம் தொழிலாளர் அமைச்சகத்தின் கணக்கின்படி, 2017-18 முதல் 2021-22 வரை ஆண்டுக்கு சராசரியாக 20 மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மதிப்பீடுகள் காட்டப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை வேலையில்லா திண்டாட்டம் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் வேலையை உருவாக்குவது சவாலாக உள்ளது.
வேலையின்மை, திறமையின்மை போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் ஒன்றரை கோடி இளைஞர்கள் வேலை தேடும் நிலைக்கு வருகிறார்கள். அதனால் நாட்டில் வேலைகள் எப்போதும் பற்றாக்குறையாகவே இருந்து வருகின்றன . இதற்கு தீர்வு கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications