இந்தியாவே நிம்மதிகொள்.. 17 மாநிலங்களில் ஒரு கொரோனா இறப்பு கூட இல்லை
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு கொரோனா மரணம் கூட பதிவு செய்யப்படவில்லை எனும் ஆறுதல் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 108. ஆனால், இதில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறப்புகள் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, குஜராத், அசாம், ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட், மேகாலயா, நாகாலாந்து, லட்சதீப், லடாக், சிக்கிம், மணிப்பூர், மிசோரம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த கோவிட் மரணமும் பதிவாகவில்லை.
வியாழக்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் 12,923 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 108 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,71,294 ஆக உயர்ந்துள்ளது, மொத்த கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 1,55,360 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் தற்போது 1,42,562 பேருக்கு மட்டும் (active cases) கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.