வாரம் 2 நாள் விடுமுறை வேணுமா? வங்கி ஊழியர்களின் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. என்னாச்சு?
டெல்லி: நம் நாட்டில் வங்கி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை என்பது வாரம் 2 நாள் விடுமுறை விட வேண்டும் என்பதாக உள்ளது. வாரந்தோறும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை மீது மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வரும் நிலையில் தற்போது வங்கி ஊழியர்களின் தலையில் இடியை இறக்கி உள்ளது.
நம் நாட்டில் வங்கிகளுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினமாகும். அதோடு அரசு விடுமுறை தினங்களில் வங்கிகள் செயல்படாது. இதுதவிர மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் வங்கி ஊழியர்கள் கூடுதல் விடுமுறையை விரும்புகின்றனர். அதன்படி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழகைளில் விடுமுறை வழங்க வேண்டும். ஐடி நிறுவனங்களை போல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு வேலை நாட்கள் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை என்பது வைக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்துடன் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பினர் ஆலோசனையும் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி கடந்த 2023ம் ஆண்டில் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பினருக்கும் மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது கையெழுத்தானது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையோடு சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என்பது அளிக்கப்பட வேண்டும். இதனை ஈடுசெய்யும் வகையில் வாரத்தில் மற்ற 5 நாட்களும் வங்கிகள் கூடுதல் நேரம் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை இந்திய வங்கிகளின் கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் தான் வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் பணி 2 நாள் விடுமுறை என்ற திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு செக் வைத்துள்ளது மத்திய நிதி அமைச்சகம். அதாவது வாரம் 2 நாள் விடுமுறை வழங்குவது என்பது நடப்பு நிதியாண்டியான 2025-26ல் செயல்பாட்டு கொண்டு வர முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் 2 நாள் விடுமுறை வழங்குவது என்பது வங்கிகளின் சேவையை பாதிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான மக்கள் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு சென்று தங்களின் பணியை முடிக்கின்றனர். ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வது இப்போது அதிகமாக இருந்தாலும் கூட சனிக்கிழமையை மையப்படுத்தி பலரும் வங்கிகளுக்கு சென்று வருகின்றனர். இப்படியான சூழலில் சனிக்கிழமை விடுமுறை வழங்குவது என்பது மக்களுக்கான சேவையை குறைக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கருதுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் வாரம் 2 நாள் விடுமுறைக்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications