என்னது 21000 கோடியா.. மினிமம் பேலன்ஸ் இல்லாதவர்களிடம் எடுத்தது.. அதைவிட ஹைலைட்டும் இருக்கு!
டெல்லி: மினிமம் பேலஸ் மெயின்டெய்ன் செய்யவில்லை என்று கூறி பொதுத்துறை வங்கிகள் மற்றும் முக்கியமான தனியார் வங்கிகள் 21000 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.
வங்கி இருப்பை போதிய அளவு பராமரிக்கவில்லை என்றால், அதாவது உங்கள் கணக்கில் குறைந்தத பட்ச தொகையை (1000 என்றால் 1000, 5000 என்றால் 5000 கண்டிப்பாக நீங்கள் பராமரிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் 1000 ரூபாயும், தனியார் வங்கிகளில் 1000 முதல் 5000 வரை சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்க வேண்டும்.

அப்படி பராமரிக்காவிட்டால் அபராதம் போடலாம் என்ற விதி பல வருடங்களாக இந்தியாவில் உள்ளது. இதேபோல் வங்கி ஏடிஎம்களில் குறிப்பிட்ட தடவை வரை மட்டுமே இலவசம். அதாவது மெட்ரோ என்றால் 3 முறை, மெட்ரோ அல்லாத பகுதி என்றால் ஐந்து முறை என்று உள்ளது. வங்கியை பொறுத்து மாறுபடும். ஏடிஎம்களில் அதிகம் பணம் எடுப்பவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கும் முறை கடந்த 2017ம் ஆண்டு முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
இப்படி பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐந்து பெரிய தனியார் வங்கிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை பொதுமக்களிடம் 35000 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளன. அதாவது குறைந்த பட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்றும் ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்யததற்காகவும் இந்த 35000 கோடி ரூபாய் கட்டணத்தை வசூலித்துள்ளன வங்கிகள். இந்த 35000 கோடி ரூபாய் முழுமையாக மக்களின் சேமிப்பு பணம் ஆகும்.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐந்து பெரிய தனியார் துறை வங்கிகள் (ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, இண்டஸ்லண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி) ஆகியவை வசூலித்த கட்டணங்கள் குறித்து நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் எழுத்துப்பூர்வமாக பதில்அளித்தார்.
மத்திய அமைச்சர் அளித்த பதிலில், 2018ம் ஆண்டு முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் ரூ.21,000 கோடியும், இலவச நம்பர் சர்வீஸ் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்களாக ரூ.8,000 கோடிக்கு மேலும், ஏடிஎம் பரிவர்த்தனைக்காக ரூ.6,000 கோடிக்கு மேலும் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்கள், இலவசப் பரிவர்த்தனைகளுக்கு அப்பால் ஏடிஎம்களைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்பவர்கள் போன்றவற்றுக்கு வங்கிகள் தனித்தனியாக கட்டணம் விதிக்கின்றன.
குறைந்த பட்ச இருப்பு என்பதை பல்வேறு வங்கிகள், பெருநகரங்களில் ரூ. 3,000 முதல் ரூ. 10,000 வரையிலும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. நகர்ப்புறங்களில் ரூ. 2,000-ரூ. 5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ. 500-ரூ. ,000 வரையிலும் குறைந்த பட்ச மாதாந்திர இருப்பாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளன. அப்படி பராமரிக்காதவர்களுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரையிலான கட்டணங்கள் விதிக்கப்படலாம். சில தனியார் வங்கிகள் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காத வங்கி கணக்கிற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.100-125 வரையிலான பணப் பரிவர்த்தனை கட்டணங்களையும் விதிக்கின்றன. இப்படி கட்டணங்கள் விதித்து தான் சுமார் 21000 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.
சராசரி குறைந்த பட்சமாத இருப்பு எவ்வாறு வங்கிகள் கணக்கிடுகின்றன?
ஒவ்வொரு வங்கிகளுக்கு வெவ்வேறு குறைந்தபட்ச இருப்பும் அதை பராமரிக்காவிட்டால் அபராதமும் விதிக்கப்படுகிறது . நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியை நாம் இப்போது உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மெட்ரோ நகரங்களில், உங்களுடைய எஸ்பிஐ கணக்கில் நீங்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 3,000; சிறிய நகரங்களில் இது ரூ. 2,000 ஆக இருக்க வேண்டும். கிராமம் என்றால் ரூ. 1,000 இருந்தால் போதும். இப்படிப்படித்தான் குறைந்தபட்ச இருப்பு இருக்கிறது. இதன் அடிப்படையில் அபராதத்தின் அளவும் தீர்மானிக்கப்படும்.
மாதத்தின் அனைத்து நாட்களிலும் ஒரு கணக்கில் பராமரிக்கப்படும் இருப்பைக் கணக்கிடுவார்கள். அதைவைத்து தான் சராசரி குறைந்தபட்ச இருப்பு கணக்கிடப்படுகிறது. எஸ்ஐபிஐ இல் 31 நாட்களில் ஒரு மெட்ரோ நகரத்தில் ஒரு கணக்கை எடுத்துக் கொள்வோம் . 10 நாட்களுக்கு ரூ. 5,000, 10 நாட்களுக்கு ரூ. 3,000, 11 நாட்களுக்கு ரூ. 2,000 என இருந்தால் ; சராசரி மாத இருப்பு: [(5,000x10)+(3,000x10)+(2,000x11)]/31 = ரூ. 3,290. எனவே இவருக்கு அபராதம் விதிக்கப்படாது.
ஆனால் இதிலேயே 11 நாட்களில் ரூ. 1,000 இருப்பு இருந்தால், சராசரி குறைந்தபட்ச இருப்பு ரூ. 2,935 ஆக இருந்திருக்கும், மேலும் அந்த மாதத்திற்கு ரூ. 10 ( பிளஸ் வரிகளும் சேர்த்து) வசூலிக்கப்படும் . ஏன் எனில் குறைந்த பட்ச இருப்பில் 50% க்கும் குறைவாக இருக்கும். மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பு பராமரிப்பு 50% முதல் 75% வரை பற்றாக்குறை இருந்தால், கட்டணம் ரூ. 12 ஆகவும், பற்றாக்குறை 75%க்கு மேல் இருந்தால் ரூ. 15 ஆகவும் அபராதம் விதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications