ஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு: லோக்சபாவில் மத்திய அரசு தகவல்
டெல்லி: ஈரான் சென்ற இந்தியர்கள் 255 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு லோக்சபாவில் தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு அளித்த பதில்: வெளிநாடுகள் சென்ற 276 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஈரானில் 255, எமிரேட்ஸில் 12, ஹாங்ஹாங், குவைத், ருவாண்டா மற்றும் இலங்கையில் தலா ஒருவருக்கு என கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றன. இவ்வாறு மத்திய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரிகள்...
ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் கார்கில் பகுதியைச் சேர்ந்த 800 பேர் கடந்த மாதம ஈரான் சென்றனர். கொரோனா தாக்குதல் பரவியதால் 800 பேரும் அங்கேயே தங்க நேரிட்டது.
ஈரானின் கோம் என்ற நகரில் இவர்கள் தங்கியிருக்கின்றனர். இப்பகுதியில் கொரோனாவின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனையடுத்து அங்கு இந்திய மருத்துவர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டது.
இக்குழுவினர் நடத்திய பரிசோதனைகளில்தான் 255 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே ஈரானில் இருந்து 53 இந்தியர்கள் நேற்று இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் ஈரானில் இருந்து 389 இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications