லோகஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ்... இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள்
டெல்லி:இலங்கை குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், வெளிநாட்டினர் உட்பட 207 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
3 இந்தியர்களும் பலி
குண்டுவெடிப்பில் பலியான 207 பேரில் 3 பேர் இந்தியர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
|
டுவிட்டரில் பதிவு
இது தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறி இருப்பதாவது: இலங்கை வெளியுறவு அமைச்சர் எச்.இ.திலக் மரப்பானாவுடன் பேசினேன். தீவிரவாத தாக்குதலில் 207 பேர் உயிர் இழந்ததனர் என்றும்,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
|
3 பேர் பெயர்கள்
இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளதாக கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளதாக இந்தியதூதரகம் கூறியுள்ளது. அவர்கள் லோகஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என தெரிய வந்துள்ளது. கூடுதல் தகவல்களை விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம்.
|
உதவி செய்ய தயார்
மனிதநேய அடிப்படையிலான உதவியை செய்ய இந்தியா தயாராக உள்ளது. தேவைப்பட்டால், மருத்துவ குழுவையும் இந்தியா அனுப்பி வைக்க தயார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.