இன்று 3 லோக்சபா, 29 சட்டசபை இடைத் தேர்தல்கள்.. பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி
டெல்லி: மக்களவையின் 3 தொகுதிகளுக்கும் மாநில சட்டசபையின் 29 தொகுதிகளுக்கும் இன்றைய தினம் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.
இந்த தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என பாஜகவும், காங்கிரஸும் கடும் போட்டா போட்டியில் உள்ளன. இந்த தேர்தலில் 3 மக்களவை தொகுதி உறுப்பினர்கள் மரணமடைந்ததால் இன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அது போல் 13 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பாலான தொகுதி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் நடத்தப்படுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மற்றும் தாத்ரா- நாகர்ஹவேலி ஆகிய 3 எம்பி தொகுதிகளின் எம்பிக்களான ராம்ஸ்வரூப் சர்மா (மாண்டி), நந்த் குமார் சிங் சவுகான் (காண்ட்வா) ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டனர். இருவரும் பாஜக எம்பிக்கள் ஆவார். தாத்ரா -நாகர் ஹவேலியின் எம்பியாக இருந்த மோகன் தேல்கர் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இவர் சுயேச்சை எம்பியாவார்.
இந்த மூவரின் இறப்பால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து இந்த தொகுதிகளுக்கு இன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அது போல் மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 5 சட்டசபை தொகுதிகளான கோசைகான், பவானிபூர் உள்ளிட்டவைகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கோசைகான் மற்றும் தமமுல்பூர் தொகுதியின் எம்எல்ஏக்கள் இறந்துவிட்டனர். மற்ற 3 தொகுதியின் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர். பவானிப்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த பானிதார் தலுக்தார் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். தற்போது அதே தொகுதி இடைத்தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
காண்ட்வா மக்களவை தொகுதியுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் மேலும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவை ராய்கான், ஜோபாட் மற்றும் பிரித்விபூர் ஆகியவை ஆகும். இதில் ராய்கான் தொகுதி பாஜக வென்றது, மற்ற இரு தொகுதிகள் காங்கிரஸ் வென்றது. அதுபோல் தெலுங்கானாவின் ஹுசுராபாத் மற்றும் ஆந்திராவின் பாத்வெல்லில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹுசுராபாத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வென்றது.
அது போல் கர்நாடகாவில் ஹனாகல் மற்றும் சிண்ட்கி தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. கர்நாடகா மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றதன் பிறகு நடத்தப்படும் முதல் தேர்தலாகும். மேகாகலா, ஹிமாச்சல் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மிசோரம், ஹரியானா ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான விறுவிறுப்பான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தந்த மாநில பிரச்சினைகளுக்கு மத்தியில் எந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications