ஐபிசி சட்டம் இல்லை.. வருகிறது பாரதிய நியாய சன்ஹிதா! கடும் தண்டனைகள்.. ஜூலை 1 முதல் அமல்: மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்கள் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா என்ற 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் ஜுலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்தியாவில் குற்றம் செய்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணை அமைப்புகள் விசாரணையின் அடிப்படையில் மற்றும் சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சட்டங்கள் வழியாக நீதிமன்றம் குற்றம் செய்பவரை தண்டித்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் என 3 வகையான சட்டங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த சட்டங்கள் அடிப்படையில் தான் போலீசார், மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் இந்த 3 சட்டப்பிரிவுகளில் புதிய வரையறைகள், விதிகளை சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்த சட்டங்கள் என்பது ஆங்கிலேயர்களின் காலனித்துவ மனநிலையை காட்டும் வகையில் உள்ளதாகவும் மத்திய அரசு நினைத்தது. இதையடுத்து அந்த சட்டங்களின் பெயர்களும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளும் மாற்றம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சில திருத்தங்களுடன் இந்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா என 2 சபைகளிலும் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. அதன்பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் திருத்தப்பட்ட மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 புதிய குற்றவியில் நடைமுறை சட்டம் வரும் ஜுலை 1ம் தேதி முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ளது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு செய்துள்ளது. இந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி இதற்கு முன்பு சில குற்றங்களுக்கு இருந்த தண்டனை என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயங்கரவாத செயல், கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்த கொல்வது, மற்றும் நாட்டுக்கு எதிரான தேசத்துரோக விஷயத்தில் ஈடுபடுவோர் மீதான குற்றச்சாட்டுக்கு முந்தைய சட்டத்தை விட தற்போதைய சட்டத்தில் அதிக தண்டனை வழங்கப்பட உள்ளது. தூக்கு தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் இந்திய தண்டனை சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதாவில் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 19 விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 33 குற்றங்களுக்கான சிறைத் தண்டனையின் காலஅளவு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 83 விதிகளின் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 23 குற்றங்களில் கட்டாயமாக குறைந்தபட்ச தண்டனை வழங்கவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications