ம.பி., ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதல்வர் யார்?.. ராகுல் - சோனியா காந்தி தீவிர ஆலோசனை
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணி என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சவாலானதாக மாறியுள்ளது. அதேசமயம், திறமையாளர்களில் யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்ற சுவாரஸ்யமான கவலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவருமான சோனியா காந்தியும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளார்.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வெற்றியைப் பார்த்த கொண்டாட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, அதை இன்னும் சுபமாக முடிக்க படு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
|
முதல்வர் ரேஸ்
ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய முக்கிய நிர்வாகிகள் இருவரும் முதல்வர் போட்டியில் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். சட்டீஸ்கரில் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல் உள்ளிட்ட 3 பேர் நடுவே கடும் போட்டி உள்ளது.
முக்கியமான சவால்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற பிறகு மூன்று மாநிலத்தின் முதல்வர்களை தேர்ந்தெடுப்பது என்பது ராகுல்காந்திக்கு மிகப்பெரிய அக்னி பரிசோதனையாக உருமாறியுள்ளது. நேற்று முதலே ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவந்தார். அந்தந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
ராகுல் காந்தி ஆலோசனை
இன்று காலை முதல் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் உள்ள ஒவ்வொருவரையாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். இருப்பினும் இன்று மாலை 4 மணி நிலவரப்படி எந்த ஒரு முடிவையும் ராகுல்காந்தி அறிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் சோனியாகாந்தி ராகுல்காந்தி இல்லத்திற்கு விரைந்து வந்து உள்ளார்.
ஏன் தாமதம்
அவர் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரை நியமிப்பது மட்டுமின்றி, அவர்கள், வரும் லோக்சபா தேர்தலில் அந்தந்த மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றியை தேடித் தருவார்களா என்ற கோணத்திலும் ஆலோசனை நடப்பதால்தான் முடிவெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. எதிர்ப்பாளர்கள் அதிருப்தி அடைந்தால், அது லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் காரணமாக, ராகுல் காந்தியால் உடனடியாக முடிவெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.