டெல்லியில் பயங்கர தீ விபத்து- 43 பேர் பலி- 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
டெல்லி: டெல்லில் அனாஜ் மண்டி பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ஜான்சிராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற பகுதியில் ஸ்கூல்பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் தொழிற்சாலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்தன.
தீ விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ராம்மனோகர் லோகியா மருத்துவமனை, இந்து ராவ் மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 43 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த தீவிபத்து குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் மோடி கூறியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தீ விபத்து நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார். மேலும் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர்.
ரூ10 லட்சம் நிதி உதவி
இந்த தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications