ஆந்திரா ராமகிரி, பெனகசெர்லா தங்க வயல்களில் 41.87 டன் தங்கம்- ராஜ்யசபாவில் மத்திய அரசு
டெல்லி: ஆந்திராவின் தங்க வயல்களில் 41.87 டன் தங்கம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இந்திய கனிமங்கள் ஆண்டு புத்தகம் 2021 இன் படி, 01.04.2020 வரை, ஆந்திராவில் 47.17 டன் கனிமங்கள் உள்ளன. இதில், 41.87 டன் தங்கமாகும். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வின்படி, சிகார்குண்டா - பிசாநத்தம் பகுதிக்கு தெற்கே ராமகிரி தங்க வயல், பெனகசெர்லா தங்க வயல், ஜோனகிரி சிஸ்ட் பெல்ட், பிசாநத்தம் ஆகிய இடங்களில் தங்க இருப்புகள் பதிவாகியுள்ளன.

எம்.எம்.டி.ஆர் சட்டம், 2015 அமல்படுத்தப்பட்ட பின்னர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிகர்குண்டா மற்றும் பிசாநத்தம் தங்க சுரங்கங்கள் குறித்த புவியியல் அறிக்கைகள் ஆந்திர மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளின் மதிப்பீடுகள் பின்வருமாறு:
சிகர்குண்டா சுரங்கம் -1-ல் சராசரியாக 5.20 பிபிஎம் தங்கத்துடன் 1.6573 மில்லியன் டன் தாதுவும், இவ்வட்டாரத்தில் சராசரியாக 5.73 கிராம் / டன் என்ற அளவில் மொத்தமாக 2.04 மில்லியன் டன்னும் மதிப்பிடப்பட்டுள்ளது.
பிசாநத்தம் : பிசாநத்தம் வட்டாரத்தில் 4.70 கிராம்/டன் சராசரி தரத்தில் 173478 டன் தாது வளம் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து கனிமங்கள்: ராஜ்யசபாவில் மற்றொரு கேள்விக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பதில்: கனிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம், தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் மற்றும் கனிம ஆய்வு மற்றும் கன்சல்டன்சி லிமிடெட் ஆகிய மூன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்களிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. லித்தியம், கோபால்ட் போன்ற முக்கியமான கனிம சொத்துக்களை வெளிநாடுகளில் இருந்து கையகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் சிலியில் உள்ள சில நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கனிமங்களை அந்த நாடுகளிலிருந்து நீண்ட காலத்திற்கு பெறுவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.
கனிம ஆய்வுகள்: முக்கிய கனிமத் துறையில் தன்னிறைவு பெறுவதற்காக இந்திய புவியியல் ஆய்வு (ஜி.எஸ்.ஐ) மற்றும் பிற ஆய்வு முகமைகள் மூலம் நாட்டில் அந்த கனிமங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதில் சுரங்க அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கியமான கனிமங்களின் விரிவான பட்டியலை சுரங்க அமைச்சகம் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளது.
கனிம பாதுகாப்பு கூட்டமைப்பு: முக்கியமான கனிமங்களின் தடையற்ற விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்கா உருவாக்கிய கனிம பாதுகாப்பு கூட்டமைப்பில் (எம்.எஸ்.பி) இந்தியாவும் உறுப்பினராகியுள்ளது. அமெரிக்காவைத் தவிர, ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நார்வே, கொரிய குடியரசு, சுவீடன், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இதன் பிற உறுப்பு நாடுகளாகும்.












Click it and Unblock the Notifications