கோவா காங். எம்எல்ஏக்கள் 5 பேர் தலைமறைவு? எதிர்க்கட்சி தலைவரே பாஜக உடன் தொடர்பு? காங். முக்கிய ஆக்ஷன்
டெல்லி: கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அமலில் இருந்தது. கடந்த மாதம் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சொந்த கட்சி எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கினர்.
ஒரு வாரமாக அங்கு அரசியல் குழப்பம் நீட்டித்த நிலையில், மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாஜக உடன் கூட்டணி அமைத்து சிவசேனா மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது கோவாவில் அரசியல் குழப்பம் அரங்கேறுகிறது. கோவா மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் 11 இடங்களில் வென்று இருந்தது. இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சிலர் பாஜக உடன் தொடர்பில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

குதிரை பேரம்
இதனிடையே கோவா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிரிஷ் சோடங்கர் சில அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது கட்சி மாற காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.40 கோடி வரை தருவதாக பாஜகவினர் குதிரை பேரம் நடத்துவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி மாஃபியாக்கள் இது தொடர்பாகக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

5 எம்எல்ஏக்கள்
இருப்பினும், பாஜக இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக பாஜக கோவா மாநில தலைவர் சதானந்த் தனவதே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதார் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தேசாய் ஆகிய 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோவா பாஜக முதல்வர் வீட்டில் அவரை ரகசியமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

நீக்கம்
இந்தச் சூழலில் கோவா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை அக்கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக இதுபோன்ற திட்டங்களைப் பயன்படுத்துவதாகக் கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். பாஜக எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட விரும்புவதாகச் சாடியுள்ள அவர், பல்வேறு குற்ற வழக்குகளைக் கொண்ட திகம்பர் காமத் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் மைக்கேல் லோபோ அதிகாரத்தைக் கைப்பற்றவும் இப்படிச் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications