இனி வரும் தேர்தல்களில் வெல்வோம்- பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
டெல்லி: இனி நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் வெல்வதற்கான வியூகங்களை வகுப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் பட்டாளம் களமிறக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் பல்வேறு நலத் திட்ட பணிகளையும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.

சட்டசபை தேர்தல்கள்
உ.பி, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற 14 மாநில இடைத்தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த தோல்வியைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

தோல்வி குறித்து ஆய்வு
இந்நிலையில் டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்களுக்கான வியூகங்கள் குறித்து இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கட்சி கட்டமைப்பு
பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பெரும்பாலானோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றுள்ளனர். அதேநேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை நேரில் பங்கேற்றுள்ளனர். பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இன்று ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரும் தேர்தல்களில் வெல்வோம் என்பது உள்ளிட்ட 18 அம்சங்களுடனான அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

மே.வங்க நிலவரம்
மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு கட்சி தாவி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இன்றைய பாஜக தேசிய செயற்குழு விவாதித்தது. மேற்கு வங்க மாநிலத்தில் மிக மோசமான பின்னடைவை பாஜக எதிர்கொண்டு வருவதால் அம்மாநில அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications