US Tariff: 140 கோடி மக்கள் தான் முக்கியம்.. 50% வரி போட்ட டிரம்புக்கு மத்திய அரசு கொடுத்த பதிலடி!
டெல்லி: நம் நாட்டுக்கு ஏற்கனவே 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்து இருந்தார். இன்று கூடுதலாக 25 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. அதில், ‛‛தேச நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது நியாயமற்றவை. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா தனது சொந்த நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்'' என பதிலடி கொடுத்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கச்சா எண்ணெய்க்கு இந்தியா வழங்கும் பணத்தை வைத்து ரஷ்யா உக்ரைன் போரை தொடர்வதாக டிரம்ப் கூறி வருகிறார்.

ஆனால் நம் நாடு கண்டுக்கொள்ளவில்லை. ரஷ்யாவுக்கும், நம் நாட்டுக்கும் இருக்கும் நீண்டகாலபந்தம் காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறோம்.
இதனால் டிரம்ப் கடும் கோபமடைந்தார். முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி இந்தியா மீது 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பு 7 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். மேலும் இடைப்பட்ட காலத்திலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று டிரம்ப் கூறினார். ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார்.
இதில் கடந்த 1ம் தேதி விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதன்பிறகு இன்று விதிக்கப்பட்ட 25 சதவீத வரி அடுத்த 21 நாட்கள் கழித்து வர உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ்அமெரிக்காவுக்கான நம் நாட்டின் ஏற்றுமதி இனி குறையும். இல்லாவிட்டால் கூடுதல் வரிகளை செலுத்தி தான் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இதனால் அமெரிக்காவில் இந்தியாவின் பொருட்களின் விலை உயரலாம். இதனால் கூடுதல் வரியில் ஏற்றுமதி செய்தாலும் அங்குள்ள மக்கள் நம் நாட்டின் பொருட்களை வாங்குவது கேள்விக்குறி தான்.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியஅரசு பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபகாலமாக இந்தியாவை அமெரிக்கா குறிவைத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை டார்க்கட் செய்கிறது. இந்த பிரச்சனையில் நாங்கள் எங்களின் நிலைப்பாடு மற்றும் இறக்குமதி குறித்த உண்மை தன்மையை மார்க்கெட் நிலவரம் அடிப்படையில் எடுத்து கூறிவிட்டோம். இந்தியாவில் உள்ள 1.4 பில்லியன் (140 கோடி மக்கள்) மக்களுக்கான எரிசக்தி தேவையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தை சொல்லிவிட்டோம்.
ஆனாலும் பல நாடுகளை போல் எங்களின் தேச நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்க முடிவு செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை. காரணமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் சொல்லிக்கொள்கிறோம். இந்தியா தனது சொந்த நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications