இதெல்லாம் ஒரு ஆதாரமா? புலன் விசாரணை மோசம்.. அமலாக்கத்துறையை ரவுண்டு கட்டிய சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: பண மோசடி தடுப்புச் சட்டத்தில் நாடு முழுவதும் முக்கிய அரசியல் புள்ளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மீது வழக்குப்பதிவு செய்து வரும் அமலாக்கத்துறை மீது உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. 5000 பி.எம்.எல்.ஏ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுத் தந்துள்ளீர்கள் என அமலாக்கத்துறையிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்.
பாஜக ஆட்சியில், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றன. அமலாக்கத்துறை அண்மைக்காலத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், திமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பலரை கைது செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுனில்குமார் அகர்வால் என்பவருக்கு எதிரான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், திபான்கர் தத்தா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தொடர்ந்து 5,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே அமலாக்கத்துறையால் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மோசமான புலன் விசாரணையின் தொடர்ச்சி என்றே பார்க்க முடிகிறது” என கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறை தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள், “குறிப்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளில் யாரோ ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தை கொண்டு திருப்தியடைந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கான உரிய ஆதாரம், முகாந்திரம் உள்ளிட்டவற்றை நிரூபிக்கத் தவறுகிறது. அமலாக்கத்துறை திருப்தி அடைந்தால் மட்டும் போதாது, அது நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட வேண்டும். எனவே புலன் விசாரணயின் தரத்தை அமலாக்கத்துறை இயக்குநரகம் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வளவு பணம் கொடுத்தேன், இவ்வளவு ரொக்கம் பெற்றேன் என்பது போன்ற வாய்மொழி ஆதாரம் நிலைக்குமா? ஏனெனில் வாக்குமூலம் கொடுத்த நபர் பின் நாட்களில் அவர் அளித்த வாக்குமூலத்தின் மீது உறுதியாக இருப்பாரா? குறுக்கு விசாரணையை எதிர்கொள்ளும் தன்மையில் இருப்பாரா? என்பது தெரியாது. அவர் சாட்சி பெட்டியில் நுழையும் போது, அவர் குறுக்கு விசாரணையை எதிர்கொள்ள முடியுமா? எனவே இதுபோன்ற வழக்குகளில் அமலாக்கத்துறை அறிவுப் பூர்வமான புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தினர்.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கைது மற்றும் இணைப்பு அதிகாரம் மற்றும் பிரிவு 45 உட்பட 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் சிறப்பு பெஞ்சிலும் இருப்பதால் இன்றைய விசாரணையில் நீதிபதிகளின் கருத்துகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2014 முதல் 2024 வரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 40 வழக்குகளில் தண்டனை உறுதி செய்யப்பட்டது என்ற தகவலை தெரிவித்தார். இதனைச் சுட்டிக்காட்டியே உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையை விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications