நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க உத்தரவு.. பிரதமர் அலுவலகம் அசத்தல்
டெல்லி: நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிஎம் கேர்ஸ்-இல் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக மோசமாக உள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 3.49 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா நோயாளிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்குச் சரிவர சுவாசிக்க ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது.
இதனால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை திடீரென பல மடங்கு அதிகரித்துது. தேவைக்கு ஏற்றபடி உற்பத்தி இல்லாததால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் நிலையும், சில இடங்களில் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது
இந்தியாவே ஆக்சிஜனுக்கு திணறும்போது .. சாதித்துக் காட்டிய தமிழகம்.. தட்டுப்பாட்டை தவிர்த்தது எப்படி?
இந்நிலையில், நிலைமையைச் சமாளிக்க நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப் பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான நிதி பிஎம் கேர்ஸ்-இல் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுச் சுகாதார மையங்களில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் இது அம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க உதவும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.