தாண்டவமாடும் வேலைவாய்ப்பின்மை-ரயில்வே குரூப் டி-க்கு விண்ணப்பித்த 6.5 லட்சம் பி.டெக் பட்டதாரிகள்!
டெல்லி: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையின் கோரத்தாண்டவத்தை அப்பட்டமாக சொல்கிறது ரயில்வே துறையில் குரூப் டி-க்கு விண்ணப்பித்தவர்கள் புள்ளி விவரம்.
நாடு முழுவதும் ரயில்வே துறையில் 1,03,769 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதாவது குரூப் டி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு கட்டங்களாக இத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 4-ம் கட்டமாக நடத்தப்படுகிற தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படுகிறது.

குரூப் டி தேர்வுகள்
தமிழகத்தில் இந்த தேர்வுகளுக்கான தேர்வு மையங்கள், வெளி மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.இதுவரை சுமார் 60,000 பணியிடங்களுக்கு மட்டும்தான் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இம்முறைதான் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

விண்ணப்பித்தோர் எண்ணிக்கை
மொத்தம் 1,03,769 பணியிடங்களுக்கு மொத்தம் 1.1 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 7,19,556 பேர் முதுகலை பட்டதாரிகள். 39,25,822 பேர் இளங்கலை பட்டதாரிகள். 59,10,255 பேர் 10-ம் வகுப்பு முடித்தவர்கள். 5,98,855 பேர் ஐடிஐ டிப்ளமோ படித்தவர்கள்.

பிடெக் பட்டதாரிகள்
இந்தப் பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதி 10-ம் வகுப்பு மட்டும்தான். ஆனால் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்த 39,25,822 பட்டதாரிகளில் பி.டெக் பட்டதாரிகள் மட்டும் 6.5 லட்சம் பேர். இவர்கள்தான் 10-ம் வகுப்பு படித்தவர்கள், ஐடிஐ படித்தவர்களுடன் போட்டி போட்டு தேர்வு எழுத உள்ளனர். ஒவ்வொரு கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்கள்
இத்தகைய புள்ளி விவரங்கள் நமது தேசத்தில் வேலைவாய்ப்பின்மை எத்தகைய கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கிறது. ஆனால் ஆண்டவர்களும் ஆட்சியாளர்களும் வேலைவாய்ப்பு தொடர்பாக வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குகின்றனர். மாநிலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசு வேலை கிடைக்கும் என காத்திருந்து மாண்டு போய்க் கொண்டிருப்பவர்கள் ஏராளம்! அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நடைமுறை ஒழிக்கப்பட்டு எத்தனையோ ஆண்டுகளாகிவிட்டது நடைமுறையில்! ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மட்டும் உயிர்ப்புடன் இருப்பது எத்தனை பெரிய ஏமாற்று வேலை என்பதை எப்போது நாம் உணர்வோம்?












Click it and Unblock the Notifications