"டாப் சீக்ரெட்.." பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. மிக பெரிய தாக்குதலுக்கு திட்டம் போடும் தீவிரவாதிகள்?
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை நடத்தி ஆறு மாதங்கள் கூட இன்னும் முழுமையாக முடியவில்லை. இதற்கிடையே மீண்டும் காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியைக் குறிவைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியிருந்தது. அதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் அழிக்கப்பட்டன. தீவிரவாத நெட்வொர்க் தகர்க்கப்பட்டது. இதனால் சில மாதங்கள் அங்குத் தீவிரவாத நடவடிக்கைகள் முடங்கிப் போய் இருந்தது.

தீவிரவாதிகள்
இதற்கிடையே பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் காஷ்மீர் பகுதியில் அதிகரித்துள்ளதாக உளவுத் துறை ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.. அப்பகுதியில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்தே ஊடுருவல், உளவு பார்த்தல் மற்றும் எல்லை தாண்டி ஆயுதங்களைக் கடத்துவது ஆகியவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.. பாகிஸ்தானின் சிறப்புச் சேவைப் பிரிவு மற்றும் உளவுத்துறை ஏஜெண்டுகள் உதவியுடன், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது குழுக்களின் பல டீம்கள், கட்டுப்பாடுக் கோடு வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
திட்டம் என்ன
ஷேம்ஷர் என்ற பயங்கரவாதியின் தலைமையில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா குழு ஒன்று, ட்ரோன்கள் மூலம் வான்வழி உளவு பார்த்து, கட்டுப்பாடுக் கோட்டின் பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வரவிருக்கும் வாரங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் அல்லது ஆயுதக் கடத்தல் நடக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த சில சீக்ரெட் உயர்மட்டக் கூட்டங்களில் ஜமாத்-இ-இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பங்கேற்றதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டங்களில் முடங்கியுள்ள பயங்கரவாதக் குழுக்களை மீண்டும் செயல்படுத்துவது, 'ஆபரேஷன் சிந்துர்' தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீக்ரெட் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பகீர் தகவல்
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஆதரவாளர்களை அடையாளம் காணவும் ஆரம்பித்துள்ளனராம். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரால் அழிந்துபோன நெட்வொர்க்கை மீண்டும் கட்டமைக்கும் பணிகளில் இறங்கியுள்ளனர்.. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சுற்றுலாத் துறை வருகை அதிகரித்துள்ள நிலையில், அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது. அதைச் சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் திட்டமிட்டுச் செயல்பட ஆரம்பித்துள்ளதையே உளவுத் துறை ரிப்போர்ட் காட்டுகிறது.
இந்த உளவுத்துறை தகவலை முக்கியமான எச்சரிக்கை என்று டெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உளவுத் துறை ரிப்போர்ட்டை தொடர்ந்து இந்திய ராணுவம் வடக்கு கமாண்ட் பிரிவுகள் உஷார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான்
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் இந்தியாவில் நுழைந்து தீவிரவாதிகள் சிலர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து சில நாட்கள் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் நடந்தது. அப்போது பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்த நிலையில், இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications