கொரோனா பரவலை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டார்.. 63% இந்தியர்கள் கருத்து... ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வே
டெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி கொரோனா பரவலைச் சிறப்பாகக் கையாண்டதாக 63% மக்கள் கருதுவதாக ஏபிபி-சிவோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் இருந்தது. மே மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 4 லட்சத்தைக் கடந்திருந்தது.
அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியிருந்தது. இப்போது தான் நாட்டில் கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது.

ராகுல் தாக்கு
கொரோனா 2ஆம் அலையை மத்திய அரசும் பிரதமர் மோடியும் எப்படிக் கையாண்டார்கள் என்பது குறித்துக் கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். பிரதமர் மோடிக்கு கொரோனா பரவல் பற்றிய புரியவில்லை என்றும் இதனால் தான் வைரஸ் பரவல் 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததே பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.

மோடிக்கு ஆதரவு
ஆனால், ராகுல் காந்தியின் இந்த விமர்சனங்கள் மக்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. ஏபிபி சிவோட்டர்ஸ் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பிரமதர் மோடி கொரோனா பரவலை தன்னால் முடிந்தவரைச் சிறப்பாகக் கையாண்டதாக 63.1% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ள 65.8% மக்களுக்கும் கிராமப் புறங்களில் உள்ள 61.9% மக்களுக்கும் பிரதமர் மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்தனர்.

ராகுல் காந்தி
அதேநேரம் ராகுல் காந்தி குறித்தும் இதில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், கொரோனா பரவலை இதைவிடச் சிறப்பாகக் கையாண்டிருப்பாரா எனக் கேட்கப்பட்டது. அதில் 22% பேர் மட்டுமே கொரோனாவை ராகுல் காந்தி சிறப்பாகக் கையாண்டிருப்பார் எனத் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு நகரப் பகுதிகளில் 20.1%, மற்றும் கிராமப் பகுதிகளில் 22.8% சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏபிபி சிவோட்டர்ஸ்
ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. கடந்த மே மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் சுமார் 12,070 பேரிடம் இருந்து கருத்துகள் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.27 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரே நாளில் 2975 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது வரை 2.8 கோடி பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 3.31 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பும் சரி, உயிரிழப்பும் சரி, இந்தியாவில் மே மாதம் தான் உச்சத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications