"கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லை.." ஆம் ஆத்மி கட்சியில் இருந்து 7 சிட்டிங் எம்எல்ஏக்கள் விலகல்!
டெல்லி: டெல்லியில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே திடீரென அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மியில் இருந்து ஏழு பேர் விலகியுள்ளனர். கெஜ்ரிவால் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த அதிஷி முதல்வராக இருக்கிறார். அங்கு இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆம் ஆத்மி:
அங்கு வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில், பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்றும் முனைப்பில் களமிறங்குகிறது. மறுபுறம் பாஜகவும் ஆம் ஆத்மியை வீழ்த்தி தலைநகர் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது. இதனால் அங்கு கடும் பிரச்சாரம் நிலவி வருகிறது.
7 சிட்டிங் எம்எல்ஏக்கள் ராஜினாமா:
இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் ஆம் ஆத்மியில் இருந்து 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். த்ரிலோக்புரி எம்எல்ஏ ரோகித், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால், ஜனக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி, பாலம் எம்எல்ஏ பாவ்னா கவுர் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் ஏழு பேருக்குமே இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது வைத்திருந்த நம்பிக்கை இழந்துவிட்டதாகப் பாலம் எம்எல்ஏ பாவ்னா கவுர், கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கெஜ்ரிவால் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லி தேர்தல்:
டெல்லியைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அங்கு எந்த கட்சி அல்லது கூட்டணி குறைந்தது 36 இடங்களில் வெல்கிறதோ.. அந்த கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். அங்குக் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே தான் இந்த முறை கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிரக் காங்கிரஸும் அங்குக் களத்தில் உள்ளது.
கடந்த தேர்தல்:
கடந்த இரு தேர்தல்களிலும் ஆம் ஆத்மி டெல்லியில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது. குறிப்பாகக் கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களில் ஆம் ஆத்மி வென்றிருந்தது. பாஜகவால் வெறும் தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஒட்டுமொத்தமாகப் பதிவான வாக்குகளிலும் சுமார் 53% ஆம் ஆத்மிக்கே வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி உள்ளது. அதேநேரம் டெல்லியில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் பாஜக களமிறங்குகிறது.
இந்த முறை டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications