ஹரித்வார் மானசா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்! 6 பக்தர்கள் பரிதாப பலி
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்திருக்கின்றனர். பலரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த துயர சம்பவம், கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் நிகழ்ந்துள்ளது.
கூட்டத்தில் இருந்த சிலர் மின்சாரம் தாக்கியதாக வதந்தி கிளப்பியதால், பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு நெரிசல் உண்டானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கார்வால் கோட்ட ஆணையர் வினய் ஷங்கர் பாண்டே கூறுகையில் இது குறித்து கூறுகையில், "நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு மன்சா தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்" என்று கூறியுள்ளார்.

சம்பவ இடத்தில் காயமடைந்த பக்தர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 55 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரித்வார் மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரமேந்திர சிங் டோபால், ஆறு பேர் பலியானதை உறுதி செய்தார்.
"உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்புப் பணியை தொடங்கினர். சுமார் 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதாக எழுந்த வதந்தியே நெரிசலுக்கு முக்கிய காரணம்" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
சிவ பக்தர்களுக்கு முக்கியமான வழிபாட்டு தலமாக ஹரித்வார் விளங்குகிறது. குறிப்பாக, சாவன் மாதத்தில் கங்கை நதியில் இருந்து நீர் எடுக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். இப்படி இருக்கையில்தான் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.
பீகாரைச் சேர்ந்த பக்தர் கூறுகையில், "கோயிலில் திடீரென அதிகமான மக்கள் கூட்டம் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றபோது கீழே விழுந்து கை முறிந்தது" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் கூறுகையில், "ஹரித்வாரில் உள்ள மன்சா தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நெரிசல் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மாநில பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications