பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் டெல்லி செங்கோட்டை.. சுற்றுலா பயணிகளுக்கும் தடை! இதுதான் காரணம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள நாட்டின் முக்கிய கோட்டைகளில் ஒன்றான செங்கோட்டையில் சுற்றுலாப் பயணிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுவார்
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படையின் தளபதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள்.

டெல்லி செங்கோட்டை
இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இந்த டெல்லி செங்கோட்டையும் ஒன்று. நாட்டின் விடுதலை போராட்டத்தில் நினைவு கூரும் வகையில் செங்கோட்டை அமைந்துள்ளது. நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய கோட்டையான செங்கோட்டை டெல்லி செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாகக் கண்டு களிக்கும் இடமாக உள்ளது. ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பயணிகள் இங்கு வருவார்கள்.

75ஆவது சுதந்திர தினம்
நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை மிகவும் கோலாகலமாகக் கொண்டாட நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படு வருகிறது. இதற்காக வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

பாதுகாப்புப் படையினர்
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்ற உள்ள செங்கோட்டையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. செங்கோட்டை இப்போது முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் தான் இப்போது பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
இதன் காரணமாக செங்கோட்டையில் நுழையச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குப் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிநபர் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

எப்போது வரை
இந்தத் தடை தற்காலிகமானது தான். பாதுகாப்புப் படையினர் மீண்டும் பாசறைக்குத் திரும்பிய பின்னர், சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல அனுமதிக்கப்படுவார்கள். நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனால் அங்கு உளவுத் துறையினரும் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications