வீல் சேர் தர மறுத்த ஏர் இந்தியா.. நடந்து போன மூதாட்டி கீழே விழுந்து படுகாயம்! இப்போ ஐசியுவில் அனுமதி
டெல்லி: ஏர் இந்தியாவில் டிக்கெட் புக் செய்த மூதாட்டி ஒருவருக்குச் சரியான நேரத்தில் வீல் சேர் வழங்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் நடந்து செல்ல நேர்ந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்படி கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்துடன் பயணித்த அந்த மூதாட்டிக்கு இப்போது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நமது நாட்டில் இப்போது முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா இருக்கிறது. முன்னணி விமான நிறுவனமாக இருந்தாலும் கூட பயணிகளைக் கையாள்வதில் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டே வருகிறது. இதற்கிடையே இப்போது ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மூதாட்டி ஒருவருக்கு மிக மோசமான அனுபவம் நடந்துள்ளது. மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில், தலையிலும் அடி பட்டுள்ளது.

82 வயதான மூதாட்டி
82 வயதான அந்த மூதாட்டி விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே தனக்குச் சக்கர நாற்காலி வேண்டும் என புக் செய்துள்ளார். இருப்பினும், ஏர்போர்ட் சென்ற பிறகு அவருக்கு வீல் சேர் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அந்த மூதாட்டி ஏர்போர்ட்டில் நடந்து சென்ற நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு மூளையில் ரத்தப்போக்கு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த மூதாட்டி முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலின் மனைவி ஆவர். அவர் விமானத்தில் செல்ல வீல் சேரை ஏற்கனவே புக் செய்திருந்தார். இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தும் அவருக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் நடக்கத் தொடங்கியுள்ளனர். அவரது குடும்பத்தினரும் அவருக்கு உதவியுள்ளனர். இருப்பினும், கவுண்டர் அருகே சென்ற போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்துள்ளார்.
உதவி கூட கிடைக்கவில்லை
கீழே விழுந்த பிறகும் கூட அந்த மூதாட்டிக்கு முதலுதவி கூட வழங்கப்படவில்லையாம். வீல் சேரை மட்டுமே எடுத்து வந்து கொடுத்துள்ளனர். முதலுதவி வழங்காததால் ரத்தம் தோய்ந்த உதடு, தலை மற்றும் மூக்கில் காயங்கள் உடனேயே மூதாட்டி விமானத்தில் ஏறி இருக்கிறார். இந்த மோசமான சம்பவத்தால் இப்போது தனது பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு நாட்களாக ஐசியுவில் இருப்பதாகவும் அவரது பேத்தி தெரிவித்துள்ளார். மேலும், கீழே விழுந்ததால் தனது பாட்டியின் உடலின் இடது பக்க வலிமையை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்..

இது தொடர்பாகப் பேத்தி பருல் கன்வார், "டெல்லியில் இருந்து பெங்களூர் செல்ல நாங்கள் ஏர் இந்தியா விமானத்தை (AI2600) புக் செய்திருந்தோம்.. அதில் தான் 82 வயதான எங்கள் பாட்டிக்கும் டிக்கெட் போட்டு இருந்தோம். டிக்கெட் புக் செய்யும் போதே வீல் சேர் வேண்டும் எனச் சிறப்புக் கோரிக்கை விடுத்து இருந்தோம். அதை ஏர் இந்தியா கன்பார்மும் செய்து இருந்தது.
வீல் சேர் இல்லை
ஆனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3ஐ (T3) அடைந்தபோது, வீல் சேர் ஒதுக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரம் வரை வீல் சேருக்காக முயன்றோம். ஏர் இந்தியாவின் ஊழியர்கள், விமான நிலைய உதவி மையம் அவ்வளவு ஏன் வேறு விமான நிறுவனத்தின் ஊழியர்களிடம் கூட கோரிக்கை வைத்தோம். ஆனாலும், எங்களுக்கு வீல் சேர் கிடைக்கவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல், குடும்ப உறுப்பினரின் உதவியுடன் பார்க்கிங்கில் இருந்து நடக்கத் தொடங்கினார். விமான நிலையத்திற்குள் வந்துவிட்டார். ஆனால், அப்போது கூட வீல் சேர் வழங்கப்படவில்லை.. உள்ளே சென்ற போது பிரீமியம் எகானமி கவுண்டரின் அருகே விழுந்துவிட்டார். அப்போதும் உதவிக்கு யாரும் முன்வரவில்லை. நாங்கள் உதவி கேட்ட போதும் யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.
உதவியும் கிடைக்கவில்லை
எங்கள் பாட்டியை நாங்களே மருத்துவ அறைக்குக் கொண்டு சென்று உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.. அதன் பிறகே கடைசியாக வீல் சேர் வந்தது. உதட்டில் ரத்தம் வழிய.. தலை மற்றும் மூக்கில் காயத்துடன் எனது பாட்டி இருந்தார். சரியான பரிசோதனை இல்லாததால் அப்படியே அவர் விமானத்தில் ஏற்றினர்.
விமானத்தில் இருந்த குழுவினர் தான் எங்களுக்கு உதவினர். அவர்கள் தான் ஐஸ் கட்டிகளை வழங்கினர். மேலும், தரையிறங்கும் முன்பே பெங்களூரில் மருத்துவ உதவிகள் தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்தனர். பெங்களூரில் வந்த பிறகு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு 2 தையல்கள் போட்டனர்.
ஐசியுவில் தீவிர சிகிச்சை
அதன் பிறகு உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு எனது பாட்டியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளையில் ரத்தப்போக்கு இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். இதனால் எனது பாட்டிக்கு ஐசியுவில் சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது இடது பக்கம் வலிமையை இழப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஏர் இந்தியாவிடம் புகார் அளித்துள்ளோம். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏர் இந்தியா சொல்வது என்ன?
இந்த போஸ்ட்டிற்கு ஏர் இந்தியா பதிலளித்திருந்த நிலையில், பருல் கன்வாரை தொடர்பு கொள்ள நம்பரை பகிருமாறு ஏர் இந்தியா கோரிக்கை விடுத்தது. இருப்பினும், உரிய விசாரணை நடத்தப்படும் வரை நம்பர் தர முடியாது என பருல் கன்வார் மறுத்துவிட்டார். இதற்கிடையே சில மணி நேரம் கழித்து ஏர் இந்தியா சார்பில் மற்றொரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், "விமானம் புறப்பட இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வர அறிவுறுத்தியிருந்தோம். ஆனால், விமானம் புறப்பட 90 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் இருந்த போதே ஏர்போர்ட் வந்தனர். மேலும், எந்த நேரத்திலும் ஏர் இந்தியா ஊழியர்கள் வீல் சேர் தர முடியாது எனச் சொல்லவில்லை. நாங்கள் அந்த குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்தோம். தேவை அதிகமாக இருந்ததால் வீல் சேர் கொடுக்க சற்று தாமதம் ஆகிவிட்டது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications