சபரிமலை சீராய்வு.. 9 நீதிபதிகள் பெஞ்ச் அமைப்பு.. மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு இடமில்லை
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜனவரி 13-ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளது. இந்த அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் பலவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த சீராய்வு மனுக்கள் மீது கடந்த வருடம் நவம்பர் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில் மூன்று நீதிபதிகள் சீராய்வு மனுவை, கூடுதல் நீதிபதிகள் (7 நீதிபதிகள்) அடங்கிய அமர்வுக்கு அனுப்பி வைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு சரிதான், எனவே சபரிமலை கோவில் அனைத்து வயது பெண்களும் செல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
மெஜாரிட்டி நீதிபதிகளின் தீர்ப்பு, கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு இந்த சீராய்வு மனுக்களை, அனுப்பி வைக்கலாம் என்று இருந்ததால், அந்த தீர்ப்பை ஏற்று கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அதேநேரம், மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் அனுமதிக்கப்படாது, தர்காக்களில் பார்சி இன பெண்கள் அனுமதிக்கப்படாது ஆகியவற்றையும் சேர்த்தே சபரிமலை வழக்குடன் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று மாலை உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சபரிமலை மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று, அந்த அமர்வில் இடம் பெற உள்ள நீதிபதிகள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்த அமர்வுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தலைமை வகிக்க உள்ளார். இதில் இடம் பெற்றுள்ள மற்ற நீதிபதிகள் பெயர்கள் இவைதான்:
ஆர்.பானுமதி, அசோக் பூஷன், நாகேஸ்வரராவ், மோகன் சாந்த கவுடர், அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த்.
இந்த நீதிபதிகள் அமர்வில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, 2018ஆம் ஆண்டு, சபரிமலை வழக்கில் முதலில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஆகிய, இந்த பெஞ்சில் அங்கம் வகித்த பிற 4 நீதிபதிகளும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கினர்.
இதையடுத்து, சீராய்வு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வில், 3 நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகும் என நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகிய 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
இப்போது அமைக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் அமர்வில், இந்து மல்கோத்ரா, நாரிமன், சந்திரசூட் ஆகிய மூன்று பேருமே, அதாவது இதற்கு முன்பு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய 3 நீதிபதிகளுமே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.