இந்தியாவில் ”மைனஸ்”இல் போன மத்திய அரசு பணிகள்.. 4 ஆண்டுகளில் 92,090 ரயில்வே வேலைவாய்ப்புகள் குறைப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 92,090 ரயில்வே பணிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பது இளைஞர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
2014 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானது ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதே.
விடை கிடைக்காத 4 கேள்விகள்.. எடப்பாடிக்கு காத்திருக்கும்
ஆனால், கடந்த 8 ஆண்டுகளாகவே வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
10 லட்சம் வேலைவாய்ப்புகள்
இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார். இந்த நிலையில்தான் ரயில்வே துறையில் இருந்த வேலைவாய்ப்புகள் குறைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
92,090 ரயில்வே வேலைவாய்ப்புகள் ரத்து
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மத்திய ரயில்வே துறையில் கடந்த 2018-19, 2021-22 நிதியாண்டுகளுக்கு இடையே அதாவது கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 92,090 வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு வேலைவாய்ப்புகளை மத்திய அரசு குறைத்தும் ரயில்வேயில் சுமார் 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.
2019-20 நிதியாண்டில் அதிகம்
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, 2018 - 2019 நிதியாண்டில் 23,366 பணியிடங்களும், 2019-20 நிதியாண்டில் 31,275 பணியிடங்களும், 27,477 பணியிடங்கள் 2020-21 நிதியாண்டிலும், 2021-22 நிதியாண்டில் 9,972 பணியிடங்களும் திருப்பி அளிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த 2019-20 நிதியாண்டில் 17 ரயில்வே மண்டலங்களில் 31,275 பணியிடங்களை மத்திய அரசு குறித்துள்ளது.
மண்டல வாரியாக குறைப்பு
அதன் தொடர்ச்சியாக வடக்கு ரயில்வேயிலும், மத்திய ரயில்வேயிலும் பணிகள் குறைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக வடகிழக்கு ரயில்வேயில் உள்ள இஜ்ஜத்நகர் மண்டலத்தில் மட்டும் 1,430 ரயில்வே பணியிடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி மண்டலம் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இதில் லக்னோ மண்டலம் 3 வது இடத்தில் இருக்கிறது.