தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டினாரா.. ஆதாரமே இல்லையே.. பாஜக பிரமுகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
டெல்லி: நாட்டின் அடையாளங்களின் ஒன்றாக உள்ள தாஜ்மஹால், பல சிறப்புகளை போலவே பல சர்ச்சைகளையும் தாங்கி நின்றுகொண்டிருக்கிறது.
தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் ஏற்கெனவே இந்து கோயில்கள் இருந்ததாக பல இந்து அமைப்புகள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், தற்போது இது குறித்து வழக்கும் தொடுத்திருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் இது குறித்து தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடம்பே சிலிர்க்கும்! வேற லெவல் 'சூப்பர் பவர்களை' கொண்ட 4 விலங்குகள்! அதிசயம்! தெரிஞ்சுக்கலாம் வாங்க
படையெடுப்பு
ஏறத்தாழ 350 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக உள்ள தாஜ்மஹால் இந்திய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. மேற்குறிப்பிட்டதைப்போல பல சர்ச்சைகளுக்கும் இது உள்ளாகி இருக்கிறது. 1986ல் வரலாற்று ஆசிரியர் என்று அழைக்கப்படும் பி என் ஓக் 'தாஜ்மஹால் தி ட்ரூ ஸ்டோரி' எனும் புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் ஒரு இந்து கோயில் இருந்ததாகவும், பின்னர் இஸ்லாமியர்களின் படையெடுப்பில் கோயில் அழிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனு தாக்கல்
இத்துடன் நில்லாமல், தாஜ்மஹாலின் கீழ் உள்ள ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் கடந்த 2000ம் ஆண்டில் இந்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து இந்த சர்ச்சைகள் சில காலத்திற்கு இல்லாமல் இருந்தன. பின்னர் மீண்டும் வெடிக்கத் தொடங்கின. சில மாதங்களுக்கு முன்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாஜக இளைஞர் ஊடக பொறுப்பாளராக இருந்த ரஜ்னீஷ் சிங் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
தள்ளுபடி
இந்த மனுவில், தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்துள்ளது. இதனை இடித்துவிட்டுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தேகத்தை போக்க தாஜ்மஹாலின் கீழ் உள்ள 22 ரகசிய அறைகளை திறந்து காட்ட வேண்டும். அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதற்கு அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம், "இன்று தாஜ்மஹால் ரகசிய அறையை திறக்க சொல்வீர்கள். நாளை நீதிபதிகளின் அறையை திறந்து காட்ட அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடுவீர்களா?" என காட்டமாக கேள்வியெழுப்பி இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேல்முறையீடு
கடந்த மே மாதம் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார் ரஜ்னீஷ் சிங். மனுவில், தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றைக் கண்டறிய உண்மையைக் கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் என்றும், தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப்பட்டது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளார்.
தற்போது தாஜ்மஹால் இருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திடம் இருந்து பெறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.