மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றடைந்தது "இந்தியா" எம்பிக்கள் குழு.. கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு
டெல்லி: மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக "இந்தியா" எம்பிக்கள் குழு விமானம் மூலம் மணிப்பூர் புறப்பட்ட நிலையில் அந்த குழுவினர் தலைநகர் இம்பால் நகரை சென்றடைந்துள்ளனர்.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடி ஆகிய இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள். 78 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தை திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மணிப்பூருக்கு வெளியே விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மாநிலத்தில் அமைதியை கொண்டு வர இரு சமூக மக்களிடையே பேச்சுவார்த்தை தனித்தனியாக நடத்தப்பட்டது. மணிப்பூரில் சிறிய அளவிலான மோதல் சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்து வருகிறது. கடந்த 18ஆம் தேதிக்கு பிறகு தற்போது வரை கலவரத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
35 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். உணவு, மருந்து மாத்திரைகள் தங்கு தடையின்றி கிடைப்பதாகவும் அங்கு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் கூறியுள்ளது. மணிப்பூரில் நடந்த சம்பவங்களுக்கு மதப்பிரச்சினை காரணம் அல்ல என கூறியுள்ள மத்திய அரசு, மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களிடம் கைவிரல் ரகை பதிவு செய்யப்படுவதாகவும் மியான்மர் எல்லையில் கம்பி வேலி அமைப்பதற்கான பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில் மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளுக்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய விமானத்தில் மணிப்பூருக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது தலைநகர் இம்பால் சென்றடைந்துள்ளனர். மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, துணைத் தலைவர் கவுரவ் கோகாய், திமுக எம்பி கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், டி ரவிக்குமார் உள்ளிட்ட 20 பேர் மணிப்பூர் செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இன்றும் நாளையும் மாநிலத்தில் கலவரம் பாதித்த இடங்களுக்குச் சென்று நிலையை நேரில் கண்டறிய திட்டமிட்டுள்ளனர். மேலும் கலவரத்தால் வீடுகளை இழந்த மக்களையும் இவர்கள் சந்திக்கிறார்கள். அது போல் இரு சமூகத்து மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.












Click it and Unblock the Notifications