மனைவியைதான் விவாகரத்து செய்ய முடியும்.. குழந்தைகளை அல்ல.. 4 கோடி கொடுங்க: உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடியும், ஆனால் தனது குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள், மனைவிக்கு, ரூ.4 கோடியை வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது.
மும்பையைச் சேர்ந்த வைரம் மற்றும் நகை வியாபாரம் செய்து வரும் நபர், மற்றும் அவர் மனைவி ஆகியோர் விவாகரத்திற்காக நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.
இவர்களுக்கு 2019ம் ஆண்டு விவாகரத்து வழங்கப்பட்டது.

4 கோடி பணம்
பரஸ்பர ஒப்புதலோடு, விவாகரத்து நடைபெற்றதால், மனைவி மற்றும் அவர் பாதுகாப்பில் உள்ள 2 மைனர் குழந்தைகளின் பராமரிப்புக்காக கணவர் 4 கோடி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பணம் தரவில்லை
உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில், இதுவரை கணவர் தரப்பு 4 கோடியை மனைவிக்கு தரவில்லை. எனவே இதுதொடர்பாக மனைவி தரப்பு உச்சநீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்தது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் எம்ஆர் ஷா அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தினர். பிரிந்த தம்பதியினரிடையே எட்டப்பட்ட மற்ற அனைத்து நிபந்தனைகளும் ஒப்பந்தப்படி பின்பற்றப்படும் என்று கணவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

பிஸினஸ் டல்லடிப்பதால் பணம் தரவில்லையாம்
கணவர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சமரச நடவடிக்கைகளில், இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக கணவர் நடத்தி வரும் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவருக்கு ரூ .4 கோடி தொகையை செலுத்த இன்னும் சிறிது கால அவகாசம் தேவை என்று வாதிட்டார்.

குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது
விவாகரத்துக்கான ஆணை வழங்கப்படும்போது, மனைவிக்கு ரூ .4 கோடி கொடுப்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள். எனவே இப்போது இந்த வியாபார பணப் பிரச்சினையை ஏற்க முடியாது. "நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்யலாம் ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதால், உங்கள் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது. நீங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். தன்னையும் மைனர் குழந்தைகளையும் பராமரிப்பதற்கான தொகையை நீங்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும்." என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

4 கோடி வழங்க உத்தரவு
மேலும், செப்டம்பர் 1, 2021 க்குள் ரூ .1 கோடியும், செப்டம்பர் 30, 2021 -க்குள் மேலும் ரூ .3 கோடியும் கணவர் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கணவருக்கான வழக்கறிஞர், உடன்பாடு ஏற்பட்ட பிறகு, வணிகம் பாதிக்கப்பட்டு தனது கட்சிக்காரர் நஷ்டமடைந்துள்ளதாகவும், நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை ஆனால் தொகையை கொடுக்க எங்களுக்கு சிறிது நேர அவகாசம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒரு மாதத்தில் ஒரு கோடியை செலுத்துவேன், அதன்பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு மற்றொரு கோடியை செலுத்த ரெடி என்றார்.

கணவர் தரப்பு தாமதம்
ஆனால், 2019ம் ஆண்டு ஆகஸ்டில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும், அப்போது கொரோனா பரவவில்லை என்றும், கணவர் ஒப்புக்கொண்ட முழுத் தொகையையும் 2019ல் செலுத்தியிருக்க வாய்ப்பு இருந்தும் அதை நீங்கள் செய்யவில்லை. எனவே, கால அவகாசம் தர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications