கடும் தவறு! ஏன் ஆக்சன் எடுக்கல? முஸ்லீம் மாணவர் தாக்கப்பட்ட வழக்கு! உ.பிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய மாணவனை, சக மாணவர்களை கொண்டு ஆசிரியை ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உ.பி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடந்து வருகிறது. குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்த மாநிலத்தைதான் பாஜகவினர் இந்தியாவின் ரோல் மாடல் என்று கூறி வருகின்றனர். ஆனால், இம்மாநிலத்தில் தொடர்ந்து சாதிய, மத மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் தலித், இஸ்லாமிய சமூத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு சம்பவம் அரங்கேறியது.

அதாவது, முசாஃபர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை வகுப்பறையில் 7 வயது இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை வைத்து வரிசையாக அடிக்கச் செய்துள்ளார். இந்த சம்பவத்தை செய்ய சில மாணவர்கள் தயங்கியுள்ளனர். ஆனாலும் விடாத ஆசிரியை அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி அடிக்கச் செய்திருக்கிறார். மட்டுமல்லாது சிறுவனின் மதத்தை குறிப்பிட்டும் திட்டியிருக்கிறார். இது அனைத்தும் வீடியாக பதிவான நிலையில், இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆசிரியரின் இந்த செயல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சத்யநாராயண் பிரஜாபத் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்துதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர் துஷார் காந்தி தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், உத்தரப் பிரதேச அரசையும், அதன் காவல்துறையையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மாணவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதையும் மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதையும் தடுக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி செயல்படுவதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் ஏன் வழக்குப்பதிவு செய்ய 2 வாரங்கள் தேவைப்பட்டது? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தாமதமாக பதியப்பட்ட எஃப்ஐஆரில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் இடம்பெறவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி கேள்வியெழுப்பினர். தந்தை, "ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக ஆசிரியை ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்" என்று கூறியிருக்கிறார். ஆனால் ஏன் எஃப்ஐஆரில் இந்த கருத்துக்கள் இல்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும், "மதத்தின் அடிப்படையில் மட்டும் ஒரு மாணவன் தண்டிக்கிக்கப்படுகிறார் எனில் அது தரமான கல்வியாக இருக்க முடியாது. இந்த வழக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்" என்று கூறி உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications