"தாக்குதலுக்கு தயார்.." ஆபரேஷன் சிந்தூரை ஆரம்பிக்க சில நிமிடம் முன்பு இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவு
டெல்லி: அதிகாலை முதலே மொத்த பாகிஸ்தானும் ஆடிப்போய் கிடக்கிறது.. ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோட்டையிலும், லஷ்கர்-இ-தொய்பாவின் கோட்டையிலும் இந்தியா சம்பவம் செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் ட்விட்டரில் பதிவு வெளியிட்டது. "Ready to strike, trained to win" என்று கூறியிருந்தது. அதாவது "தாக்கத் தயாராகிவிட்டோம், வெற்றி பெற முயற்சிப்போம்" என்று கூறப்பட்டிருந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு வாரமாகவே இருந்து வந்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

ஆனால் போர் ஒத்திகை என்று கூறிய இந்தியா, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், இன்று அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்கள் பயிற்சி செய்யும் இடங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியது. பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி இருந்தன.
பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) கோட்டையான பஹாவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பயிற்சி தளமான முரிட்கே உள்ளிட்ட பயங்கரவாத தளங்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் ட்விட்டரில் பதிவு வெளியிட்டது. அதில் இந்திய ராணுவத்தின் பீரங்கிகள் தாக்குவது போலவும், ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவது போலவும் வீடியோ இருக்கிறது. அதற்கு மேல் "Ready to strike, trained to win" என்று கூறியிருந்தது. அதாவது "தாக்கத் தயாராகிவிட்டோம், வெற்றி பெற முயற்சிப்போம்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புதுறை அமைச்சகம்,"சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் மிஷனை முன்னெடுத்தது. அதன்வழி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் மீது தீவிரவாதத் தாக்குதலை தொடுக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம். பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி 25 இந்தியர்களையும் ஒரு நேபாள நாட்டவரையும் சுட்டுக்கொன்றதற்கான எதிர்வினைதான் இந்த தாக்குதல் என்று விளக்கம் அளித்தது.
தாக்குதல் நடத்த இடங்களை பொறுத்தவரை முரிட்கே என்ற இடம் லாகூரிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பயிற்சி தளமாகும். அதேபோல் பஹாவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் முக்கியமான கோட்டையாகும். மற்ற இலக்குகளான கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகியவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் ஆகும். அங்கு லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இரண்டும் நீண்ட காலமாக முகாம்களையும், பயிற்சி வசதிகளையும் கொண்டு செயல்பட்டு வந்திருந்தன. அங்குதான் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல்களுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் கூறுகையில் "பாரத் மாதா கீ ஜெய்" என்று கூறியுள்ளார். இந்திய இராணுவம் தனது எக்ஸ் தளத்தில் "நீதி நிலைநாட்டப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரியும் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றி அவர் கூறும் போது, "எங்கள் விமானப்படை ஜெட் விமானங்கள் அனைத்தும் வான்வழியையும் அடைத்திருந்தன. ஆனால் இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டிருக்கிறது . இந்திய படைகள் பாகிஸ்தானின் இடத்திற்குள் வந்து ஊடுருவ ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை," என்று கூறினார்.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும் போது, "இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்தப் போருக்கு நிச்சயம் பொருத்தமான பதிலடி கொடுக்க எங்கள் நாட்டிற்கு முழு உரிமையும் உள்ளது" என்று கூறினார். பாகிஸ்தான் தேசமும் பாகிஸ்தான் ராணுவமும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பதை நன்கு அறிந்திருக்கின்றன" என்று அவர் ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications