திடுதிப்பென மாறும் காட்சி- நாளை பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கெஜ்ரிவால் கட்சி பங்கேற்காது?
டெல்லி: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாளை நடைபெறும் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது.
காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு முயற்சியில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி ஒரு நெருடல் பாத்திரத்தை வகித்து வருகிறது. காங்கிரஸ் செல்வாக்கை இழப்பதற்கான அல்லது ஆட்சியை மாநிலங்களில் பறிகொடுப்பதற்கான காரணங்களில் ஒன்றான ஆம் ஆத்மி இருந்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டி நிலவும் மாநிலங்களில் ஆம் ஆத்மி உள்ளே நுழைந்து ஆட்டத்தை தொடர்ந்து காங்கிரஸுக்கு எதிராகவே ஆடி வருகிறது. இதனால் ஆம் ஆத்மியை ஒரு எதிரியாகத்தான் பார்க்கிறது காங்கிரஸ்.

லோக்சபா தேர்தலை முன்வைத்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொன்டிருந்தார். அதே காலகட்டத்தில் டெல்லி மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரும் மாநிலங்கள்தோறும் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில்தான் ஜூன் 23-ந் தேதி பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மியும் பங்கேற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் ஆலோசனைக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பை இருவருமே புறக்கணித்தனர். அப்போதே இது சசலப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் டெல்லி சேவைகள் மசோதா தொடர்பாக காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே கடும் கருத்து மோதல்கள் வெடித்தன. ஆம் ஆத்மி கட்சியை பாஜகவின் பி டீம் என சாடியது காங்கிரஸ். இதற்கு ஆம் ஆத்மியும் பதிலடி கொடுத்தது. ஆம் ஆத்மி செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவைத்து படுக்கக் கூடாது என நினைக்கிறது அக்கட்சி. ஆனால் இது அரசியல் தற்கொலை என்கிறது காங்கிரஸ். இந்த களேபரங்களுக்கு நடுவேதான் நாளை பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பெங்களூரில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா என்பது தொடர்பாக விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில்தான் நாளை பெங்களூர் கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது முடிவு எடுக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications