நான் ஜெயிலில் இருந்தாலும் டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெல்லும்: கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியின் அடுத்த சட்டசபை தேர்தல் வரை என்னை ஜெயிலில் வைத்தால் தலைநகரில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளிலும் வெல்வோம் என அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 23ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் அரசியல் பயணம், டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்தார். இந்த பேட்டியில் கெஜ்ரிவாலிடம், ‛‛நீங்கள் சிறையில் இருந்தால் உங்களின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தேர்தலில் போட்டியிடுவாரா?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால், ‛‛என் மனைவி தேர்தலில் போட்டியிடமாட்டார். அவர்கள் (அமலாக்கத்துறை) என்னை தொடர்ந்து சிறைப்படுத்தி இருந்தாலும் கூட சிறையில் இருந்தே தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதோடு நாங்கள் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
எங்களின் அனைத்து எம்எல்ஏக்களையும் ஜெயிலில் வைத்து கொண்டு டெல்லியில் ஓட்டுப்பதிவு நடத்தினாலும் கூட வெற்றி பெறுவோம். ஏனென்றால் மக்களை முட்டாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் நிச்சயம் பதிலளிப்பார்கள்’’ என்றார்.
டெல்லியை பொறுத்தமட்டில் கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்றது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது. மீண்டும் டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த இடைக்கால ஜாமீன் என்பது ஜுன் 1 வரை தான் பொருந்தும். அதன்பிறகு ஜுன் 2ல் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய வேண்டும்.
இதற்கிடையே தான் அவர் தனது இடைக்கால ஜாமீனை கூடுதலாக 7 நாட்கள் நீட்டிப்பு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை வைத்தது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் ஜுன் 1ம் தேதிக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் சரணடைய வேண்டும். அப்படி சரணடையும் பட்சத்தில் அவர் மீண்டும் சிறையில் இருந்து எப்போது வருவார் என்பது பெரிய கேள்விக்குறித்தான்.
ஏனென்றால் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஓராண்டு ஆகியும் இன்னும் ஜாமீன் கிடைக்காமல் சிறையிலேயே உள்ளார். இத்தகைய சூழலில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பேட்டியில் தான் சிறையில் இருந்து கூட சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் ஆம்ஆத்மி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications