"கூட்டணி எல்லாம் எனக்கு புரியாது.." 2024இல் தனியாக களமிறங்கும் ஆம் ஆத்மி? கெஜ்ரிவால் பரபர கருத்து
டெல்லி: 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று கருத்து அதிகரித்து வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
2024 மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் இரு ஆண்டுகள் இருந்தாலும் கூட, தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கேசிஆர், நிதிஷ்குமார் ஆகியோர் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைக்க முயல்கின்றனர். பாஜகவைத் தோற்கடிக்க இது மட்டுமே ஒரு வாய்ப்பு என்பது அவர்கள் எண்ணம்.

ஆம் ஆத்மி
இந்தச் சூழலில் பாஜகவை எதிர்க்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். டெல்லியைத் தாண்டி ஆம் ஆத்மியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அவர் தீவிரமாக உள்ளார். பஞ்சாபைத் தொடர்ந்து குஜராத்திலும் ஆம் ஆத்மி தேர்தலில் களமிறங்க உள்ளது. இதற்காக அங்குத் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

தனித்து போட்டியா
2024இல் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள முயற்சிகள் எடுக்கப்படும் போதிலும், தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் உள்ளீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், 2024 "அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பது மட்டும் இந்தியாவை நம்பர் ஒன் நாடாக மாற்றிவிடாது. இந்த நாட்டை நம்பர் ஒன் ஆக்க இந்தியாவின் 130 கோடி மக்களையும் நாம் ஒன்றுதிரட்ட வேண்டும்..

புரியவில்லை
நான் யாருக்கும் எதிரானவன் இல்லை. ஆனால் கூட்டணி வைப்பதும் அதை முறித்துக் கொள்வதும் என இருக்கும் இந்த அரசியல் எனக்குப் புரியவில்லை. இங்குப் பலரும் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ஆனால், எனக்கு இதெல்லாம் புரியவில்லை. அவர்கள் அவர்களால் முடிந்ததை செய்யட்டும்.

தெரியாது
உங்களுக்குப் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும் என்றால் என்னைக் கூப்பிடலாம். சாலைகள் வேண்டும் அல்லது உங்கள் மின் சேவையில் பிரச்சினை என்றால் என்னை அழைக்கலாம். நான் சரி செய்து தருவேன். ஏனென்றால் நான் ஐஐடியில் படித்தவன். ஆனால் எனக்குக் கூட்டணிகள் எப்படிச் செயல்படும், சீட் பகிர்வு குறித்து எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். அது எனக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.

குஜராத்
ஆம் ஆத்மி டெல்லியைத் தாண்டி பல மாநிலங்களில் காலூன்ற முயன்று வருகிறது. பஞ்சாபைத் தொடர்ந்து அடுத்து பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கும் களமிறங்குகிறது ஆம் ஆத்மி.. இந்த பிரசாரத்திற்காக சமீபத்தில் அங்கு அரவிந்த் கெஜ்ரிவால், அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்குச் சென்று இரவு உணவு சாப்பிட்டு இருந்தார்.

முக்கியம்
அதேநேரம் 2024 மக்களவை தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சிகளும் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தனித்துக் களமிறங்குவது ஆளும் பாஜகவுக்கே பலத்தைத் தரும் என்பதால், ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டியது முக்கியம் என்று மூத்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்தச் சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications