டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... பாஜகவின் கனவு டமால்- காங். அவுட்... எக்ஸிட் போல் முடிவுகள்
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
டெல்லியின் 70 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. 60%க்கும் குறைவான வாக்குகளே பதிவாகி இருந்தன.
இந்த வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளன.
டைம்ஸ் நவ்-ஐபோசோஸ் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி 44 தொகுதிகளிலும் பாஜக 26 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்கதேவை 36 இடங்கள். இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கூறுகிறது டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்.
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி.. 57 தொகுதிகளை வெல்லும்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்
ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை எப்படியும் கைப்பற்றுவோம் என கனவு காணும் பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் முடிவுகள்.
சுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 45; பாஜகவுக்கு 24 முதல் 28 தொகுதிகள் கிடைக்கும் என்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அல்லது 3 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது சுதர்ஷன் நியூஸ் எக்ஸிட் போல்.
நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகள், ஆம் ஆத்மிக்கு 53 முதல் 57 இடங்கள் கிடைக்கலாம் என கூறுகின்றன. பாஜகவுக்கு 11 முதல் 17 இடங்கள்தான் கிடைக்குமாம். காங்கிரஸ் கட்சிக்கோ அதிகபட்சம் 2 இடம்தான் வாய்ப்பு என்கிறது நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகள்.
எக்ஸிட் போல் முடிவுகளின் அடிப்படையில் டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. ஆட்சி அமைக்கும் பாஜகவின் கனவு தகரும் என்றும் பல்லாண்டு காலம் டெல்லியை ஆண்ட காங்கிரஸ் இருக்கும் இடம் தெரியாமல் போகும் எனவும் ஆரூடம் தெரிவிக்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.
ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி 49 முதல் 63 தொகுதிகளிலும் பாஜகவுக்கு 5 முதல் 19 இடங்களும் கிடைக்குமாம். காங்கிரஸுக்கு மிக அதிகபட்சமாக 4 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஏபிபி எக்ஸிட் போல்
நியூஸ் எக்ஸ் போல்ஸ்டார் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 50 முதல் 56 இடங்கள் கிடைக்குமாம். பாஜகவுக்கு 10 முதல் 14 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்புள்ளதாம். காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது இந்த எக்ஸிட் போல்
டிவி9-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி 54 இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 15 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் கிடைக்குமாம்.
நியூஸ்24- ஜான் கி பாத் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 55 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்கிறது. பாஜகவுக்கு 15 இடங்கள்தானாம். காங்கிரஸ் கட்சிக்கு மற்ற எக்ஸிட் போல்களைப் போல் ஒரு இடமும் கிடைக்காது என்கிறது.