டெல்லியில் காங். தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை- திமுக, சமாஜ்வாதி பங்கேற்கவில்லை!
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்ட அரசியல் சூழ்நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, சமாஜ்வாதி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் இன்று தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தனர்.
சீரியஸாக எச்சரிக்கும் சுப்ரமணியன் சுவாமி... நிலை குலைய வைக்கும் அணு குண்டு..!
மமதா பானர்ஜி
இது குறித்து மமதா பானர்ஜி கூறுகையில், சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றை முதன் முதலில் எதிர்த்தது நாங்கள்தான். நாங்கள் போராடிய போது காங்கிரஸும் இடதுசாரிகளும் எங்கே போயிருந்தனர்? குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் என்கிற பெயரில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு இரு கட்சிகளும் விளம்பரம் தேடிக் கொள்கின்றன. ஆகையால் டெல்லி கூட்டத்தைப் புறக்கணிப்போம் என கூறியிருந்தார்.
மமதா கடிதம்
ஏற்கனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மமதா பானர்ஜி அனுப்பிய கடிதம் ஒன்றில், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த போராட்டம் குறித்து ஆலோசிக்க வருகை தர வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது காங்கிரஸும், இடதுசாரிகளும் இணைந்து இம்முயற்சியை மேற்கொள்வதால் மமதா இக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறார்.
மாயாவதி விமர்சனம்
இதேபோல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வரும் மாயாவதியும் இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என கூறினார். அத்துடன் கோட்டா குழந்தைகள் மரணம் தொடர்பான பிரியங்கா காந்தி ஏன் சென்று பார்க்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
|
ஆம் ஆத்மி
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சியும் அறிவித்தது. இதனையடுத்து இன்று பகல் 2.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திமுக, சமாஜ்வாதி பங்கேற்பு இல்லை
இக்கூட்டத்தில் திமுக, சமாஜ்வாதி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்துகு சென்று மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் இருந்தும் டி.ஆர். பாலு இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
யார் யார் பங்கேற்பு
இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல், மன்மோகன்சிங், என்சிபியின் சரத்பவார், இடதுசாரிகள் தலைவர்களான டி. ராஜா, யெச்சூரி பங்கேற்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன், ஜே.எம்.எம். கட்சியின் ஹேமந்த் சோரன் ஆகியோர் பங்கேற்றனர்.