ரூ.55 ஆயிரம் கோடியை செலவு செய்து.. ஊழியர்களை பணியிலிருந்து தூக்கிய அசென்சர்.. ஏன் தெரியுமா?
டெல்லி: அசென்சர் நிறுவனம், உலகளவில் 11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அதன் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. வரும் மாதங்களிலும் மேலும் பல பணிநீக்கங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசென்சர் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அசென்சர் தனது ஆண்டறிக்கையின்படி, 2024 மற்றும் 2023 நிதியாண்டுகளில் முறையே $438 மில்லியன் மற்றும் $1,063 மில்லியன் அளவுக்கு வணிக மேம்பாட்டு செலவுகளை மேற்கொண்டது. இதில் பெரும்பாலானவை ஊழியர்களுக்கான பணிநீக்கச் செலவுகளாகும். அதாவது கிட்டத்தட்ட 600 மில்லியன் டாலருக்கு மேல் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி அவர்களுக்கு வழங்கப்படும் 2 மாத கூடுதல் சம்பளத்திற்கு அந்த நிறுவனம் செலவுசெய்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாயை இதற்காக அந்த நிறுவனம் செலவு செய்துள்ளது. மேலும், நிறுவனம் $865 மில்லியன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அசென்சர் வளர்ச்சி குறைவு
அமெரிக்க அரசின் செலவுக் கட்டுப்பாடுகளால் கார்ப்பரேட் துறையில் ஏற்படும் தேவை குறைவு காரணமாக, இந்த ஆண்டு வளர்ச்சி மந்தமாக இருக்கும் என அசென்சர் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாக $865 மில்லியன் மறுசீரமைப்புத் திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் Q4FY25 காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஊழியர்களுக்கான வணிக மேம்பாட்டுச் செலவுகள், பணிநீக்கச் செலவுகள் உட்பட, கடந்த காலாண்டில் $615 மில்லியனை எட்டியுள்ளன. நடப்பு காலாண்டில் கூடுதலாக $250 மில்லியன் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிநீக்கச் செலவுகள் என்பது, பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கும் நிதிப் பலன்களைக் குறிக்கிறது.
2025 நிதியாண்டில், பணிநீக்கச் செலவுகள் $344 மில்லியனை எட்டியுள்ளன. முந்தைய ஆண்டில் கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு உள்ளது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மூலம் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் சேமிக்க முடியும் என்று அசென்சர் நம்புகிறது.
அசென்சர் நிறுவனத்தின் $865 மில்லியன் மறுசீரமைப்புத் திட்டத்தில், திறமையான ஊழியர்களுக்கான அடுத்த கட்ட பணிநீக்கச் செலவுகளும் அடங்கும். எங்களுக்குத் தேவைப்படும் திறன்களைக் கொண்டவர்களை பணியில் அமர்த்துவதற்கு, பயிற்சிக்கு சாத்தியமில்லாதவர்களை மிகக் குறுகிய காலத்தில் வெளியேற்ற முயற்சிக்கிறோம்.. இதற்கு நிறைய செலவாகி வருகிறது என்று என்று தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் ஆய்வாளர்களுடனான பேட்டியில் தெரிவித்தார்.
அசென்சரின் layoff
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அசென்சரின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7,79,000 ஆக இருந்தது. இது மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த 7,91,000 ஊழியர்களை விட சுமார் 11,000 குறைவு.
ஜூன்-ஆகஸ்ட் 2025 காலாண்டில் அசென்சரின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்து, $17.60 பில்லியனை எட்டியது. செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரை அசென்சரின் நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. அந்நியச் செலாவணி தாக்கத்தால் வருவாய் மாற்றத்தில் சுமார் 2.5% ஏற்பட்டதாக அசென்சர் குறிப்பிட்டுள்ளது.
ஐடி துறை பாதிப்பு
ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.
ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications