"அதானி தான் இந்தியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ்.." சர்ச்சைக்கு மத்தியில் டாப் அதிகாரி விளக்கம்! என்ன சொன்னார்
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் விளக்கமளித்துள்ளார்.
டெல்லி: அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கையைப் போலியானது என்று தெரிவித்த அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங், அதானியை இந்தியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இந்த அறிக்கை இருந்தது.
இது வெளியான பிறகு அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையை மறுக்கும் வகையில் அதானி குழுமம் சார்பிலும் விரிவான பதில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கை
தங்கள் நிறுவனம் மீது திட்டமிட்டு பொய்யான தகவல்களை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது. மேலும், பொய்யான தகவல்களைப் பகிர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் அளித்த பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

விளக்கம்
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்கின் அறிக்கை போலியானது என்று தெரிவித்த ஜுகேஷிந்தர் சிங், குழுமத்தின் பிஸ்னஸ் குறித்து நாங்கள் தவறாகச் சொல்லியதாகக் கூறும் நிலையில், அதுபோல எதையும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "பொய் மற்றும் தவறான தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த இந்த போலி அறிக்கை கூட எங்கள் பிஸ்னஸை நாங்கள் தவறாகக் குறிப்பிட்டுள்ளதாக எந்த இடத்திலும் கூறவில்லை.

உள்நோக்கம்
அவர்களின் அறிக்கை எங்கள் அடிப்படை பிஸ்னஸ் குறித்து எதையுமே பேசவில்லை.. அவர்கள் ஷாட் செல்லிங் (short-selling) செய்யும் ஒரு நிறுவனம் (அதாவது குறையும் பங்குகளை விற்று அதன் பின் வாங்கும் நிறுவனம்) என்பதையும் நான் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எழுப்பிய 88 கேள்விகளில் 68 கேள்விகளுக்கு 413 பக்கங்களில் நாங்கள் விரிவான பதில் அளித்துள்ளோம். அந்த அமெரிக்க நிறுவனம் நிதி ஆதாயங்களைப் பெறத் தவறான உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை உருவாக்கியுள்ளது.

அதானி இந்தியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ்
அவர்கள் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. அவர்கள் கட்-காப்பி-பேஸ்ட் வேலையை மட்டுமே செய்துள்ளனர். அதானி குழுமத்தைக் குறிவைத்து இந்த வேலையை அவர்கள் செய்துள்ளனர். அவர்கள் வேண்டுமென்றே பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். பொய்கள், தவறான கருத்துக்களை அவர்கள் கூறுவதை எங்களால் ஏற்க முடியாது.. கவுதம் அதானி தான் இந்தியாவின் ஸ்டீவ் ஜாப்ஸ்" என்ரும் அவர் குறிப்பிட்டார்.

அதானி குழுமம்
ஷார்ட் செல்லிங்கில் நிபுணத்துவம் பெற்ற சிறிய நியூயார்க் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் சில நாட்களில் 50 பில்லியன் டாலர் வரை சரிந்தது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இது அவரது மொத்த சொத்து மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியாகும். அதானி குழுமத்திற்குக் கணிசமான கடன் இருப்பதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மறுப்பு
மேலும், அதானி குழுமம் கடன்களுக்கான பங்குகளை உத்தரவாதமாக அளித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இருப்பினும், இந்த அறிக்கையை அதானி குழுமம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. பொய்யான தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications