மகா கும்பமேளா நிகழ்வில்.. 50 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் அதானி குழுமம் - இஸ்கான்!
டெல்லி: பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா சிறப்பாக நடைபெற உள்ள நிலையில், அதானி குழுமமும் இஸ்கான் அமைப்பும் இணைந்து இதில் கலந்து கொள்ளும் 50 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்க உள்ளன. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறும். இந்துக்களின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கும்பமேளா இருக்கிறது.

பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனிதத் தலத்தில் மகா கும்பமேளா நடைபெறும். இதற்கு உலகெங்கும் இருந்து வந்த பல கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
மகா கும்பமேளா:
இந்தாண்டு மகா கும்பமேளா வரும் ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடக்கிறது. மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்த உத்தரப் பிரதேச அரசும் மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளைச் செய்து வருகின்றன. இதில் 40 கோடி பக்தர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்சாரம், கழிப்பறை, குளியலறை என்று பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே மகா கும்பமேளா சமயத்தில் இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அதானி குழுமமும் இஸ்கான் அமைப்பும் இணைந்து உணவு வழங்க முடிவு செய்துள்ளன. ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறும் நிலையில், அனைத்து நாட்களிலும் உணவு வழங்கப்படுகிறது.
அதானி- குரு பிரசாத் சுவாமி சந்திப்பு:
இஸ்கான் அமைப்பின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இன்று வியாழக்கிழமை இஸ்கான் குழுவின் (ஜிபிசி) தலைவர் குரு பிரசாத் சுவாமியை நேரில் சந்தித்தார்.
பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கும் சேவைக்கு இஸ்கானின் உதவிக்கு நன்றி தெரிவித்துள்ள அதானி மேலும் கூறுகையில், "மக்களுக்கு சேவை செய்யக் கும்பமேளா ஒரு புனிதமான இடம். இங்கு வரும் ஒவ்வொரு பக்தரும் கடவுளுக்குச் சேவை செய்கிறார். அப்படி கடவுளுக்குச் சேவை செய்யும் கும்பமேளா பக்தர்களுக்கு இஸ்கான் அமைப்புடன் இணைந்து பிரசாதம் வழங்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.
அன்னபூரணியின் ஆசியுடன், இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். இன்று இஸ்கான் தலைவர் பிரசாத் சுவாமியை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.. சேவையில் அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கும் அவரை சந்தித்தது எனது பாக்கியம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சேவை தான் தேசபக்தியின் மிக உயர்ந்த வடிவம். சேவை தான் தியானம்... சேவை தான் பிரார்த்தனை மற்றும் சேவையே கடவுள்" என்று குறிப்பிட்டார்.
कुंभ सेवा की वो तपोभूमि है जहां हर हाथ स्वतः ही परमार्थ में जुट जाता है!
— Gautam Adani (@gautam_adani) January 9, 2025
यह मेरा सौभाग्य है कि महाकुम्भ में हम @IskconInc के साथ मिलकर श्रद्धालुओं के लिए ‘महाप्रसाद सेवा’ आरम्भ कर रहे हैं, जिसमें मां अन्नपूर्णा के आशीर्वाद से लाखों लोगों को निःशुल्क भोजन उपलब्ध कराया जाएगा।
इस… pic.twitter.com/0DMlzO56hY
இஸ்கான் குரு பிரசாத் சுவாமி:
இஸ்கான் அமைப்பின் குரு பிரசாத் ஸ்வாமி இது தொடர்பாகக் கூறுகையில், "கார்ப்பரேட் பொறுப்பு மற்றும் சமூக சேவையில் ஒரு நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதானி குழுமம் எப்பொழுதும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவரது பணிவே கவுதம் அதானியை சிறப்பானவராக ஆக்குகிறது.
யாரவது ஒருவர் தன்னிடம் கேட்க வேண்டும் என்று ஒருபோதும் காத்திருக்க மாட்டார். சுயநலம் கருதாமல் சேவை செய்பவர்.. அவரது பங்களிப்புக்காக மிகவும் நன்றி. சமூகம் நமக்கு என்ன தருகிறதோ.. அதை நாம் சமூகத்திற்குத் திரும்பத் தர வேண்டும் என்பதற்கு அவர் உத்வேகம் தருகிறார்" என்றார்.
50 லட்சம் பக்தர்களுக்கு
இரு தரப்பும் இணைந்து 50 லட்சம் பக்தர்களுக்குப் பிரசாரம் வழங்க உள்ளனர். இதற்காகக் கும்பமேளா நடக்கும் இடத்திலும் அதற்கு வெளியிலும் இரண்டு சமையலறைகளை அமைத்து உணவைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். கும்பமேளா நடைபெறும் பகுதியில் 40 இடங்களில் பிரசாதம் விநியோகிக்கப்பட உள்ளது. அதில் 2,500 தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தாய்மார்கள் எளிதாகச் செல்ல கோல்ஃப் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஐந்து லட்சம் பகவத்கீதை பிரதிகளைத் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன












Click it and Unblock the Notifications