கடைசிவரை ரெடியா இருந்தேனே.. சென்டிமென்ட்டாக மூவ் செய்த ஓபிஎஸ்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
டெல்லி : அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது.
கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்ததை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது.
இரு நீதிபதிகள் அமர்வு ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
“கோ பேக்” எடப்பாடி.. மறவர் கூட்டமைப்பின் “பரபர” போஸ்டர்! ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேர் கைது
அதிமுக பொதுக்குழு வழக்கு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது.
ஓபிஎஸ் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகம் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு இந்த வழக்கு விசாரணை சற்று முன்பு தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களைத் தொடங்கியது.
விசாரணை - எதிர்பார்ப்பு
ஓபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு அவருக்கு சாதகமான விளைவைக் கொடுக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சென்றபோது அங்கு உட்கட்சி பிரச்சனை தொடர்பாக விசாரிக்க அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் ஐகோர்ட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டில் விசாரணை எந்தக் கோணத்தில் செல்லும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
அதிமுகவின் அனைத்து பதவிகளுக்கான நியமனங்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் மேற்கொள்ள முடியும் என்றும், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், ஆனால், இதனை இதை டிவிசன் பெஞ்ச் கணக்கில் கொள்ளவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை வைத்து வருகிறது.
தன்னிச்சையாக
ராஜ்ய சபா எம்.பி தொடர்பான முடிவைக் கூட ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்துதான் எடுத்தோம். கடைசி வரை கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் நீங்கள் வேண்டாம் என என்னை வெளியே தள்ளிவிட்டு முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளனர் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் அதிரடி
ஓபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு மீது பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்துள்ளது. இதையடுத்து தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது.