லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்ட சிறுவன்! 2 மணி நேர திக் திக் பயணம்! டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தின் லேண்டிங் கியரிலேயே சிறுவன் ஒளிந்து கொண்டு இருந்துள்ளான். சுமார் 2 மணி நேரம் அந்தச் சிறுவன் அப்படியே பயணித்துள்ளான். டெல்லியில் விமானம் தரையிறங்கிய பிறகே அதிகாரிகள் அந்தச் சிறுவனைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் விமான நிலையத்தில் உச்சப்பட்சப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும். அங்கிருக்கும் பாதுகாப்பு வளையத்தை மீறி யாருமே உள்ளே வர முடியாது. ஆனாலும், அதையும் தாண்டி சில சம்பவங்கள் நடந்துவிடும். அப்படி நம்பவே முடியாத ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

13 வயது சிறுவன்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவர், விமானத்தில் யாருக்கும் தெரியாமல் பயணித்திருக்கிறார். அந்தச் சிறுவன் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் லேண்டிங் கியர் வழியாகவே விமானத்தில் ஏறி மறைந்து வந்திருக்கிறார்.
பொதுவாக விமான நிலையத்தில் ஏகப்பட் செக்கியூரிட்டி செக்கள் இருக்கும். உரிய டிக்கெட் இல்லாமல் ஒருவரால் விமானத்தில் ஏற முடியாது. நீங்கள் விமான நிலையத்திற்குள் எப்படியோ வந்தாலும் கூட டிக்கெட் இல்லாமல் விமானம் அருகே கூட போக முடியாது. ஆனால், ஆப்கானிஸ்தான் 13 வயதே ஆன சிறுவன் யாருக்கும் தெரியாமல் விமானத்திற்குள் வந்து பதுங்கியுள்ளான்.
2 மணி நேரம்
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. நேற்று காலை 11 மணிக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த காம் ஏர்லைன்ஸ் விமானம் RQ-4401 வழக்கம் போல டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அந்த விமானம் ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 2 மணி நேரம் பயணித்து டெல்லி வந்தடைந்துள்ளது.
அப்போது விமானத்தில் டையர் பகுதியில் இருந்து சிறுவன் ஒருவன் கேஷ்வலாக இறங்கி நடந்து சென்றுள்ளான். இதைப் பார்த்தும் அதிர்ந்து போன பாதுகாப்பு அதிகாரிகள், உடனே இது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமான நிறுவன ஊழியர்கள் அந்தச் சிறுவனைப் பிடித்து, மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
லேண்டிங் கியர்
அப்போது விசாரணையில் தான் காபூல் விமான நிலையத்திற்குள் ரகசியமாக நுழைந்து, விமானத்தின் பின்பக்க லேண்டிங் கியர் பெட்டிக்குள் எப்படியோ ஏறிவிட்டதாகச் சிறுவன் கூறியிருக்கிறான். எதற்காக இதுபோல செய்தாய் என கேட்டதற்கு.. விமானத்தில் போக வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அதுபோல செய்ததாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளான் அந்தச் சிறுவன்!
விசாரணையில் அந்தச் சிறுவன் சொல்வது உண்மை என்றே தெரிய வந்துள்ளது. மேலும், சிறுவன் எந்தவொரு நாசவேலையிலும் ஈடுபடவில்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். விசாரணைக்குப் பிறகு, அந்த ஆப்கான் சிறுவனை மீண்டும் ஆப்கனுக்கே அனுப்பி வைத்தனர். மதியம் 12:30 மணியளவில் அதே விமானம் ஆப்கானுக்குச் சென்ற நிலையில், அதிலேயே அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டான்.
விரிவான சோதனை
காம் ஏர்லைன்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள் லேண்டிங் கியர் பெட்டியைச் சோதனை செய்தபோது, அங்கு ஒரு சிறிய சிவப்பு நிற ஸ்பீக்கர் இருப்பதைக் கண்டுபிடித்தனர். சிறுவன் பாட்டுக் கேட்க இந்த ஸ்பீக்கரை கொண்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள். சிறுவன் இருந்த இடம் மட்டுமின்றி, விமானம் முழுமையாக அதிகாரிகள் விரிவான சோதனை நடத்தியுள்ளனர். நாசவேலைக்கு அந்தச் சிறுவன் எதையும் திட்டமிடவில்லை என்பதை உறுதி செய்த பிறகே விமானம் திருப்பச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications