ஆப்கன் விவகாரம் குறித்து விளக்கம் தர.. ஆகஸ்ட் 26இல் அனைத்து கட்சி கூட்டம்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா எடுத்துவரும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளுக்கு விளக்க வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். 20 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் இருந்த வரை தாலிபான்கள் பெரியளவில் எந்தவொரு தாக்குதலையும் நடத்தாமல் இருந்தனர்.
இதனால் தாலிபான்கள் எந்தளவுக்கு வலிமையாக இருப்பார்கள் என்பதைக் கணிக்க அமெரிக்கா தவறிவிட்டது. அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதுமே ஆப்கனை மிக விரைவில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தொடங்கினர்.

ஆப்கன் விவகாரம்
பல இடங்களில் தாலிபான்களை ஆப்கன் படைகள் எதிர்க்கவில்லை. இதனால் அனைவரும் எதிர்பார்த்தைத் காட்டிலும் மிக விரைவாகத் தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தலைநகர் காபூலுக்குள் நுழைந்த தாலிபான்கள் அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர். ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் கானி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அங்குள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைத் தாயகம் அழைத்து வரும் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இந்தியா நிலைப்பாடு
தாலிபான்கள் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, ஆப்கன் விவகாரத்தில் இந்தியா எடுத்து வரும் நடவடிக்கை ஆகியவை குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா எடுத்துவரும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளுக்கு விளக்குமாறு பிரதமர் மோடி தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பிரதமர் மோடி
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் பிறகு ஆப்கனில் இருந்து விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். நேற்று தான், ஆப்கன் எம்பிகள் நரேந்திர சிங், அனார்கலி ஹானார்யார் உட்பட 168 பேர் ஆப்கனில் இருந்து பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

என்ன நடக்கிறது.
ஆப்கன் நாட்டில் இருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விலக்கிக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு 15,000 அமெரிக்கர்களும் 50 முதல் 60 ஆயிரம் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் பணிகளில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாட்டின் பிற பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட போதிலும், காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தாலிபான்கள் தலைநகரைக் கைப்பற்றியதில் இருந்தே அங்குள்ள விமான நிலையத்திற்குத் தினசரி ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அங்கு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ஏழு முதல் 10 பேர் வரை உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய அமெரிக்காவே இதற்கு முழு காரணம் என்று தாலிபான்கள் குற்றஞ்சாட்டினர்.












Click it and Unblock the Notifications