டிசம்பர் 6இல் நடைபெறும் "இந்தியா" கூட்டணியின் அடுத்த கூட்டம்... 4 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி?
டெல்லி: 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.

தற்போது வரை பார்க்கும் போது, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெல்லும் சூழல் இருக்கிறது. அதேநேரம் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடுத்த கூட்டம்: இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் குறித்த அறிவிப்பைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார். வரும் புதன்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மற்ற கட்சிகளுக்கு மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,
ஆலோசனை: இதில் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணியின் அவசியம், அடுத்தகட்ட திட்டம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
பாஜகவை வீழ்த்த நாடு முழுக்க இருக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், இதில் சில சிக்கல்கள் இருந்து வந்தன. அந்த நேரத்தில் பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எடுத்த முயற்சியில் பாட்னாவில் நடந்தக் கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு இந்தியா எனப் பெயரிடப்பட்டது.
இந்தியா கூட்டணி: இந்தியத் தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி- என்ற இந்தக் கூட்டணிக்குப் பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிராவில் நடந்த கூட்டத்தை சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே நடத்திய நிலையில், அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
5 மாநில தேர்தல் காரணமாக அதன் பிறகு இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் மீண்டும் இப்போது இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications