டெல்லியில் நீடிக்கும் பயங்கர வன்முறைக்கு காரணம் பாஜகவின் கபில் மிஸ்ரா!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் பயங்கர வன்முறைக்கு பாஜகவின் கபில் மிஸ்ரா விடுத்த எச்சரிக்கைதான் காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video
டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிராக பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசியும் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்ற போது, போராடும் அனைவரையும் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பாஜக எம்பி பிரவேஷ் வர்மா பேசியது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் ஷாகீன் பாக் போராட்டங்களைப் போல ஜாபராபாத்திலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதற்கு எதிராக தமது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பாஜகவின் கபில் மிஸ்ராவும் போராட்டத்தில் குதித்தார்.
அப்போது பேசிய கபில் மிஸ்ரா, இந்தியாவில் டிரம்ப் இருப்பதால் அமைதியாக இந்த இடத்தை விட்டு நகருகிறோம். ஆனால் டிரம்ப் சென்ற பிறகு போலீசாரின் பேச்சை நாங்கள் கேட்கப் போவதில்லை என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று காலை முதலே வடகிழக்கு டெல்லியில் பயங்கர மோதல் வெடித்தது.
முதலில் காலை 11 மணியளவில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. சி.ஏ.ஏ. ஆதரவு- எதிர்ப்பாளர்கள் இடையேயான இம்மோதலான இரு சமூகங்களிடையேயான மோதலாகவும் மாறியது. இதனால் உச்சகட்ட பதற்றம் அங்கு நிலவியது. இதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் 3.45 மணியளவில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மாலையில் ஒரு கும்பல் கடைகளை சூறையாடி வன்முறையில் இறங்கியது.
இப்படி காலை முதல் மாலை வரை நீடித்த தொடர் வன்முறைகளால் 7 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். பாஜகவின் கபில் மிஸ்ரா விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து இத்தகைய மோதல்கள் வெடித்து உயிர் பலிகள் ஏற்பட்டன என்பது சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. இதனால் கபில் மிஸ்ராவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications