ஆப்கன் விவகாரம்.. நாளை டெல்லியில் நடக்கும் சிறப்பு கூட்டம்.. ஏன் மிக முக்கியம்
டெல்லி: ஆப்கனில் தற்போது இருக்கும் நிலைமை ஆலோசிக்கச் சிறப்புக் கூட்டம் ஒன்றை இந்தியா நாளை நடத்துகிறது. ஆப்கன் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மத்திய ஆசிய நாடுகளும் விவாதிப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆப்கனை தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் கைப்பற்றியது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளனர்.
இருப்பினும். ஆப்கனில் இதுவரை முழுமையாக அமைதி மீளவில்லை. இதற்கிடையே பல சர்வதேச நாடுகளும் ஆப்கன் நிலை குறித்துத் தொடர்ந்து பல முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

சிறப்புக் கூட்டம்
இந்தச் சூழலில் நாளை தினம், அதாவது நவ.10ஆம் தேதி ஆப்கன் அரசியல் சூழல் தொடர்பாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. இந்த கூட்டத்தில் ஆப்கன் அண்டை நாடுகள் மட்டுமின்றி அனைத்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கன் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மத்திய ஆசிய நாடுகளும் விவாதிப்பது இதுவே முதல்முறையாகும்.

சீனா, பாகிஸ்தான்
பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், இந்தியா நடத்தும் இந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறியிருந்தார். இந்தச் சூழலில் சில திட்டமிடல் சிக்கல்கள் ("scheduling issues") உள்ளதால் இந்தக் கூட்டத்தில் சீனாவும் பங்கேற்காது எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றாலும் கூட ஆப்கன் விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடல்களைத் தொடர விரும்புவதாகவும் இதற்காகத் தூதர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது

ஆலோசனை
இரு அண்டை நாடுகளும் பங்கேற்காது என அறிவித்துள்ள அதே நேரத்தில், ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு எழுந்துள்ள சிக்கல்கள், குறிப்பாக அதிகரிக்கும் பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆயுதங்கள்
மேலும், ஆப்கனில் அமெரிக்கா விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தாலிபான்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பது குறித்தும் அதில் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் பங்கேற்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் பிரதமர் மோடியையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர்களில் சிலர் அமிர்தசரஸ் மற்றும் ஆக்ராவிற்கும் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உதவிகள்
ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றத்தில் இருந்தே அங்கு நிலவும் நிலை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ள நிலையில், இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும், ஆப்கன் உடன் தனியாக ஒரு பேச்சுவார்த்தையை நடத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கனில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அந்நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

பாகிஸ்தான் முடிவு
பாகிஸ்தானின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்று தான் என்று தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை முக்கிய அதிகாரி ஒருவர், உலகின் பல நாடுகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதே தங்கள் முதன்மை நோக்கம் எனக் கூறும் பாகிஸ்தான் இந்த கூட்டம் என்றில்லை இதற்கு முன் நடந்த சிறப்பு கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

தாலிபான்களுக்கு அழைப்பு இல்லை
நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசியப் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் இந்த சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் பாதுகாப்பு சார்ந்த கூட்டங்கள், தூதரக கூட்டங்கள் நடைபெறும். இந்த சிறப்புக் கூட்டம் பாதுகாப்பு சார்ந்த கூட்டங்கள் தானே தவிரத் தூதரக கூட்டம் இல்லை. அதேநேரம் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எந்த நாடும் தாலிபான்கள் அரசு அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ இல்லை. இதனால் ஆப்கன் குறித்து விவாதிக்கும் இந்தக் கூட்டத்தில் தாலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications