Sudarshan Reddy: துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி.. இந்தியா கூட்டணியின் சுதர்சன் ரெட்டி சொன்னது என்ன?
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் 300 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவிய இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி(Sudarshan Reddy), தேர்தலில் தோல்வியடைந்தாலும் சித்தாந்த ரீதியிலான போர் அதிக வீரியத்துடன் தொடரும் என்று கூறியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷும், இந்தியா கூட்டணிக்கு கடந்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணமாகக் காட்டி கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 15-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9-ஆம் தேதி (நேற்று) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி
இந்த தேர்தலை முன்னிட்டு, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் இருமுனை போட்டி உறுதியானதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஆதரவு திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
சுதர்சன் ரெட்டி கருத்து
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்ததும், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக கூட்டணியின் சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தோல்வி குறித்து சுதர்சன் ரெட்டி கூறியதாவது: "முடிவு எனக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சிகள் கூட்டாக முன்னெடுத்த குறிக்கோள் மங்காமல் இருக்கும். சித்தாந்தப் போர் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும். நமது குடியரசின் ஜனநாயக செயல்முறைகளில் நிலையான நம்பிக்கையுடன் இந்த முடிவை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
40 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது
இந்த பயணம் எனக்கு மிகச் சிறந்த கவுரவமாகும். நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டுமே வலுப்பெறாது; உரையாடல், கருத்து வேறுபாடு மற்றும் பங்கேற்பு உணர்வாலும் வலுப்பெறும். சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக ஒரு குடிமகனாக நான் உறுதியாகத் தொடர்ந்து நிற்பேன். நமது அரசியலமைப்புச் சட்டம், நமது தேசிய வாழ்வின் வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து இருக்கட்டும்."
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது:- கடந்த குடியரசுத் துணை தலைவர் தேர்தலை விட இந்த முறை இந்தியா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி வேட்பாளர் 26 சதவீதம் வாக்குகளை பெற்றார். இம்முறை 40 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications