அக்னிபாத் எதிர்ப்பு உக்கிரம்: டெல்லியில் காங். ரயில் மறியல்! நாடு முழுவதும் 529 ரயில் சேவைகள் ரத்து!
டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதால் இன்று 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் அக்னிபாத் எனும் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. பல ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன.

இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியில் இன்றும் காங்கிரஸ் கட்சியின், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது ரயில்களை மறித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மொத்தம் 529 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 181 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள்; 348 பாசஞ்சர் ரயில்கள்.

தமிழகத்தில் ரயில் மறியல் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications